Research For B.Ed. – செயல்நிலை ஆய்வு (கல்விமாணி கற்கைநெறி)

கல்விமாணி கற்கைநெறி (Bachelor of Education) க்கான செயல்நிலை ஆய்வொன்றின் மாதிரியொன்றை இங்கு பதிவிட்டுள்ளோம். இப்பதிவு கல்விமாணி கற்கை நெறியினைப் பயிலும் மற்றும் பயிலயிருக்கும் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இப்பதிவின் மூலம் செயல்நிலை ஆய்வொன்றினை எவ்வாறு மேற்கொள்வது என்ற அடிப்படை தெளிவுபடும் என நம்புகிறோம். மேலும் Pdf தேவையானவர்கள் கீழுள்ள Download Link இனை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

We have
posted a sample of an Action Research for the Bachelor of Education
Course. This post will be useful for teachers who have studying B.Ed. We hope
this article will give you a basic understanding of how to conduct an Action
Research. And also
Pdf can be obtained
by clicking the download link below.


Table of Contents

நிகழ்நிலை வகுப்பினூடாக நீளம் அளத்தல் திறனை மேம்படுத்தல்


(வலப்பனை கல்வி வலயத்தின் ம.மா/வ/பிளேலோமவுண்ட் தமிழ் வித்தியாலயத்தின் தரம் 04 மாணவரை அடிப்படையாகக் கொண்ட செயல்நிலை ஆய்வு)

சந்திரகுமார் தயாலனி
BE/17/T/1/1755

கல்விமாணி கற்கைநெறி


2017/2021

ஆசிரியர் கல்வித் துறை,
தேசிய கல்வி நிறுவகம்,
மகரகம.
2021

Improving the Skill in
Measuring Length Through Virutal Class

( Action Research Based
on the Student in Grade 04 of CP/W/Blairlomond T.V in Walapane Zone )

 

Chandrakumar Dayalini 

BE/17/T/1/1755

 

Bachelor of Education 

2017/2021

 

Department of Teacher
Education

National Institute of
Education

Maharagama

2021

பொருளடக்கம்

வெளிப்படுத்துகை

நன்றி நவிலல் 

பொருளடக்கம் 

அட்டவணைகளின் பட்டியல் 

உருக்களின் பட்டியல் 

ஆய்வுச் சுருக்கம்

அத்தியாயம் 01

    1.0 அறிமுகம் 

    1.1 பிரச்சினை

    1.2 பிரச்சினையை விளக்குதல்

    1.3 பிரச்சினையும் தொழில்சார் வகிபங்கும்

    1.4 பிரச்சினை தொடர்பான நோக்கு

அத்தியாயம் 02

    2.0 ஆய்வுப்பிரச்சினை தொடர்பான அடிப்படை விடயங்களை தேடியறிதல் 

    2.1 பிரச்சினை தொடர்பான ஆரம்ப தகவல்களைத் திரட்டுதல்.

    2.2 தரவு முக்கோணப்படுத்தல் மூலம் காரணிகளை அறிந்து கொள்ளல்.

    2.3 காரணிகளுடன் தொடர்பான கல்விசார் தேடல்.

    2.4 ஆய்விற்கு அடிப்படையான எண்ணக்கரு வரைபடம்.

அத்தியாயம் 03

    3.0 ஆய்வுச் செயன்முறையைத் திட்டமிடுதல்.

    3.1 செயற்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்த கருதுகோள்கள்.

    3.2 தலையிடலின் அடிப்படைச் செயற்பாடுகள்.

    3.3 தலையீட்டின் அடிப்படைத் திட்டத்தை தயாரித்தல்.

    3.4 ஆய்வு ஒழுக்கக் கோவை

    3.5 ஆய்வின் வரையறைகள்

    3.6 தலையிடலின் ஆரம்பத் திட்டத்தினை செயற்படுத்திய விதமும் பிரதிபலிப்பும்.

    3.7 இரண்டாம் வட்டத்தில் திட்டத்தை செயற்படுத்திய விதமும் பிரதிபலிப்பும்

    3.8 இறுதி பிரதிபலிப்பின் மூலம் கண்டறிந்தவைகள்

4.0 உசாத்துணை நூல்கள்

5.0 இணைப்புக்கள்

6.0 காலச் சட்டகம்

7.0 மேற்பார்வையாளர் அறிக்கை 

8.0 ஆய்வு அறிக்கையை ஒப்படைக்கும் பத்திரம்

ஆய்வுச் சுருக்கம்

தினசரி வாழ்க்கையில் நாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு கணித ரீதியாகவே தீர்வுகளை காண்கின்றோம். எதிர்கால வாழ்க்கையில் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவது ஆசிரியரின் பணியாகும். ஆரம்ப வகுப்புகளில் வழங்கப்படும் கணித பயிற்சிகள் பிரசினங்களுக்கு முடிவு காணுதல் போன்ற விடயங்களை மாணவருக்கு வழங்குவது காலத்தின் கட்டாய தேவையாகும். 
தரம் 04 இல் நீளம் அளத்தல் என்ற எண்ணக்கருவினை நிகழ்நிலையின் ஊடாக கற்பிக்கும் போது ஓரு மாணவருக்கு ஏற்பட்ட பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காகவே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. எனவே “நிகழ்நிலை வகுப்பின் ஊடாக நீளம் அளத்தல் திறனை மேம்படுத்தல்” என்ற ஆய்வு தலைப்பினை மையமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. 
ஆய்வுக்கான இலக்குக் குழுவாக மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை கல்வி வலயத்தில் ம.மா/வ/பிளேலோமவுண்ட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் ஓரு மாணவனை அடிப்;படையாகக் கொண்டு இச்செயல்நிலை ஆய்வானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்செயல்நிலை ஆய்வுக்கான தரவுகள் அவதானிப்பு முறை, நேர்காணல் முறை, ஆவணக்கற்றாய்வு முறை மூலம் பெறப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கல்விசார் சூழமைவில் ஆய்வு தொடர்புடைய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள்,  சஞ்சிகைகள் என்பன திரட்டப்பட்டு அதிலுள்ள தகவல்கள் ஆய்வினை செம்மைப்படுத்தி வடிவமைப்பதற்கு ஏதுவாக அமைந்தது.
பிரச்சினையுடன் தொடர்பான எண்ணக்கரு வரைபடம் ஒன்றை ஆய்வாளரால் தயாரிக்கப்பட்டு கருதுகோள்களை அமைத்து தலையீட்டுச் செயற்பாடுகளும் திட்டமிடப்பட்டன. செயற்பாடுகள் அனைத்தும் நிகழ்நிலையினூடாக வழங்கி பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க திட்டமிடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தலையிடலின் ஆரம்ப திட்டமிடல் முதல் இறுதி திட்டமிடல் வரை பிரதிபலிப்புகளை கருத்திற் கொண்டு ஆய்வுச்செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற பிரதிபலிப்புக் குறிப்புகளை கொண்டு ஆய்வு தொடர்பான இறுதி முடிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாய்வின் மூலம் குறித்த மாணவனின் பிரச்சினையை இழிவுபடுத்துவதற்கும் இச்செயல் நிலை ஆய்வு முழுமையாக துணை புரிந்தது.

அத்தியாயம் : 01

1.0 அறிமுகம்

ஒரு சமூகம் உயிர்ப்புடன் திகழ்வதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது. சமூகத்தின் எழுச்சிக்கும்இ வீழ்ச்சிக்கும் ஆசிரியரின் நேர் நடத்தைகளும் எதிர் நடத்தைகளும் காரணங்களாக அமைவதுண்டு. எனவே ஆசிரியரின் முக்கியத்துவத்தையும் ஆசிரியத்துவத்தின் மேன்மையினையும் நாம் நன்கு உணர்ந்து கொள்வதனூடாக எமது ஆசிரியத்துவத்தினை சிறப்பாக்கிக் கொள்ள முடியும்.
ஆசிரியர் தமது வாண்மைத்துவத்தை வளர்ப்பதற்காக பெறும் கல்வியானது ஆசிரியரின் தனியாள் விருத்தியினையும், குழுவொன்றின் தலைவர் என்ற உணர்வினையும், மாற்றுமுகவர் என்ற கருத்தோற்றத்தையும், தேசத்தை கட்டியெழுப்புபவர் என்ற எண்ணக்கருக்களை விருத்தியடையச் செய்கின்றது. அந்த வகையில் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி பட்டக் கற்கை நெறியின் ஓர் அம்சமாக பாடசாலையில் மாணவர்களிடத்தே காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாகவே இச்செயல்நிலை ஆய்வு அமைந்துள்ளது.
இச்செயல்நிலை ஆய்வு மத்திய மாகாணத்தில் வலப்பனை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ம.மா/வ/பிளேலோமவுண்ட் தமிழ் வித்தியாலயத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்பாடசாலை உடப்புசல்லாவ நகரிலிருந்து சுமார் 12km தூரத்தில் அமைந்துள்ள ஒரு கஷ்டப் பிரதேச பாடசாலையாகும். இப்பாடசாலை வகை 3 இக்குரியதாகும்.. இப்பாடசாலையில் மூன்று கட்டடங்கள் காணப்படுகின்றன. அத்தோடு இதுவோர் கலவன் பாடசாலையாகும். இப்பாடசாலையில் 72 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அத்துடன் 06 ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இப்பாடசாலையிலுள்ள தரம் 04 வகுப்பறையானது 17 மாணவர்களை கொண்டமைந்துள்ளது. இவ்வகுப்பறையில் 05 ஆண் பிள்ளைகளும் 12 பெண் பிள்ளைகளும் கல்வி பயில்கின்றனர். வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் கூட கணித பாடத்தை நிகழ்நிலையினூடாக கற்பிக்கும்போது செயற்பாடுகளுடன் கற்க முடியாமை இச்செயல்நிலை ஆய்வுக்கான அடிப்படை பிரச்சினையாக உருவகித்து எழுந்தது.
தற்காலத்தில் சாதாரணமாக கடையில் பொருட்கள் கொள்வனவு செய்யும் வரவு செலவு கணக்குகளில் இருந்து பாரிய பொறியியற் செயற்றிட்டங்கள் வரை கணித அறிவு தேவைப்படுகின்றது. ஆனால் தேவைப்படும் அறிவின் மட்டமும் பிரயோக முறையும் வேறுபாடு அடைகிறதேயன்றி தேவையின் அத்தியாவசியம் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றுதான்.
எனவே கணித அறிவு அவரவர் தேவைக்கேற்க சாதாரண குடிமகன் தொடக்கம் பாரிய செயற்றிட்டங்களை நிறைவேற்றும் விஞ்ஞானிகள் வரை தேவைப்படும் அறிவாகும். இதனால் பாடசாலை கல்வி முறையில் கணித அறிவு எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டிய அவசியத்தை கல்வியலாளர்கள் உணர்ந்தார்கள். இதன்போது கணித அறிவு வழங்குவதில் கல்வியியலாளர்கள் இரண்டு பிரச்சினைளுக்கு ஏற்ப தொழிற்ப்பட வேண்டியவர்களாயினர். அப்பிரச்சினைகள் பின்வருமாறு,
    01. கணிதத்தில் எல்லோரும் பாண்டித்தியம் அடைய முடியாது.
    02. கணித அறிவு ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆற்றல் மட்டம், தேவைகளுக்கேற்ப எங்ஙனம் வழங்குதல் என்ற கேள்வி.
அதாவது ஒன்று வாழ்க்கைக்கான கணித அறிவு மற்றையது அறிவிற்கான கணிதம் என்பனவாகும். அறிவிற்கான கணிதம் வழங்குவதில் பாரிய பிரச்சினைகள் ஏற்படவில்லை. ஏனெனில் அறிவைத் தேடுபவர்கள் நுண்மதி கூடியவர்களாகவே காணப்பட்டனர். ஆனால் வாழ்க்கைக்கான கணிதம் வழங்குவதில்தான் சிக்கலும் பிரச்சினைகளும் ஏற்படலாயிற்று. ஏனெனில் சகல மட்டங்களில் உள்ளவர்களுக்கும் கணித அறிவினை வழங்க வேண்டிய செயற்பாட்டில் அறிவு பெற வேண்டியவரின் கொள்ளளவு, விவேகம், நுண்மதி என்பன பெரும்பங்கை வகிக்கும் முக்கிய காரணிகளாகும்.
இக்கணித அறிவானது ஆரம்ப வகுப்புகளிலே மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய தேவைப்பாடு ஆசிரியருக்கு உண்டு. எனவே தரம் 04 கணித பாடத்தில் ஒவ்வொரு அலகுகளும் மாணவருக்கு முக்கியமானவையே. கணித அறிவை விருத்தி செய்வதற்கு கணித பயிற்சிகள்,  பிரச்சினைகளுக்கு முடிவுகள் எவ்வாறு காணப்படுகின்றதோ அந்தளவு கணித அறிவில் தெளிவும் காணப்படும். எனவே தரம் 04 இல் நீளம் அளத்தல் என்ற எண்ணக்கருவினை கற்பிக்கும்போது கற்பித்தல் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செயற்பாடு ரீதியிலான கற்பித்தல் என்பன இவ் எண்ணக்கருவை ஆழப்பதிப்பதில் பெரும்பங்கினை வகிக்கின்றது.
ஆயினும் இவ்வெண்ணக்கருவினை நிகழ்நிலையில் கற்பிக்கும்போது வகுப்பறையில் மெல்லக் கற்கும் ஒரு மாணவன் மிகவும் இடர்பட்டமையை அவதானிக்க முடிந்தது. அதனை ஆய்வாளரின் பிரதிபலிப்புக்களை பதிவு செய்து வரவுக்குறி இட்டு முன்னுரிமையின் அடிப்படையில் நீளம் அளத்தல் என்ற பிரச்சினை ஆய்வுக்கு உட்படுத்ததக்க பிரச்சினையாக தெரிவு செய்யப்பட்டது. 
ஆய்வாளரின் ஆய்வுக்குரியவரான குறித்த மாணவன் நிகழ்நிலை வகுப்பில் நீளம் அளத்தல் தொடர்பான எண்ணக்கருவில் தேர்ச்சிகளை அடைவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார். இப்பிரச்சினையின் அடிப்படையில் “ நிகழ்நிலை வகுப்பினூடாக நீளம் அளத்தல் திறனை மேம்படுத்தல் ” என்ற தலைப்பினை ஆய்வுக்குரிய தலைப்பாக ஆய்வாளரால் தெரிவு செய்யப்பட்டது.

1.1 பிரச்சினை

ஆரம்பக் கல்வி கலைத்திட்டம் தேசியக் கல்வி கொள்கைக்கு அமைவாகவே தயாரிக்கப்படுகின்றது. ஆரம்பக்கல்வி எவ்வாறு கல்வியின் அடி அத்திவாரமாக அமைகின்றதோ அதே போல் வாழ்க்கையில் ஓர் உறுதியான ஆரம்பமாகக் கூறப்படுகின்றது. வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு வருங்காலத்திற்கு வழிவகுக்கும் கல்வியாக இருக்க வேண்டும் என உணரப்படுகின்றது. 
ஆரம்பக் கல்வியைப் பிள்ளைகள் எப்படி கற்பது? அவர்களைச் சுற்றியுள்ள ஏனைய மக்களுடனும் உலகத்துடனும் சிறந்த பயனுள்ள உறவுகளை எவ்வாறு விருத்தி செய்வது என்பதையும் கற்றுக்கொடுக்கின்றது. சீரான ஆரம்பக் கல்வி இல்லாமல் உயர்தரக் கல்வி அர்த்தமானதா என்பது கேள்விக்குறியே. தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை ஆரம்பநிலைக் கல்வியை கற்கும் வருடங்கள் முழுப் பாடசாலை வாழ்கையிலும் மிக முக்கிய காலப்பகுதியென்றே கூறலாம்.
ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்தை மையமாக கொண்டு பள்ளியில் ஆரம்பக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பிரதானமானவர்கள் ஆவர். அவர்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் போது சகலகலா வல்லுனர் என்ற வகையில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளல் வேண்டும். தற்போது சிலாகித்து பேசும் பொருளாக காணப்படும் நிகழ்நிலை கற்பித்தல் என்பது ஓர் ஆசிரியருக்கு மிகவும் அவசியமானதொன்றாகும்.
கணிதமானது எண்ணக்கரு சார்ந்த ஒரு விடயமாகும். கணித எண்ணக்கருக்களை பெரும்பாலும் விருத்தி செய்து கொள்வதற்காக ஆரம்பக் கல்வியில் கணித சிந்தனைத் திறனை வளர்க்க வேண்டும். அத்துடன் இளமையில் மூளையின் செயற்பாட்டிற்கும் கணிதமே அடிப்படையாக அமைகின்றது. குறித்த மாணவனிடம் கணித எண்ணக்கருக்கள் தொடர்பான சில பிரச்சிiனைகள் காணப்பட்ட போதிலும் நீளம் அளத்தல் என்ற எண்ணக்கரு தொடர்பான தேர்ச்சியை அடைந்து கொள்வதில் சில பிரச்சினைகளை எதிர்நோக்கினார். அதாவது,

பிரச்சினைக்கூற்று

நீளத்தை முறையாக அளப்பதிலும் அதனை அலகுகள் மூலம் குறித்துக் காட்டுவதிலும் இடர்படுதல்.

எனவேஇ எதிர்காலத்தில் இம் மாணவன் புலமைப்பரிசில் பரீட்சை, அத்தியாவசிய கற்றல் தேர்ச்சி தொடர்பான கணிப்பீடுகள் மற்றும் வாழ்க்கையிலும் இடர்பாடுகளை சந்திக்க நேரிடும் என்பதால், நிகழ்நிலை வகுப்பினூடாக நீளம் அளத்தல் திறனை மேம்படுத்தல் எனும் இத்தலைப்பு ஆய்வாளரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.
கணித அறிவையும் திறன்களையும் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு கருமங்களின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிதமும் பயன்படுத்த வேண்டியேற்படுவதுண்டு. எனவே கணித எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் தொடர்பான தெளிவான அறிவையும் கணித செய்கைகள் தொடர்பான திறன்களையும் பெற்றிருப்பது தற்கால சமூகத்தில் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவையாக உள்ளன. 
கணித்தல், அளத்தல், எண்சார்ந்த தகவல்களை ஒழுங்குபடுத்துதல், பகுப்பாய்வு செய்தல், மதிப்பிடல், பிரச்சினைக்கு தீர்வு காணல், தர்க்க ரீதியில் சிந்திக்கப் பழகுதல், தீர்மானம் எடுத்தல் போன்றவை கலைத்திட்டத்தில் கணித பாடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுவதற்கு காரணமாக அமைகின்றது.
நன்கு கட்டமைக்கப்பட்டு கவனமாக வழிகாட்டும் வகையில் திட்டமிட்ட களிப்பூட்டத்தக்கவாறான செய்முறையை சார்ந்து மாணவர்கள் கற்பதற்கு வகைசெய்கின்ற விதத்தில் போதுமானளவு செயற்பாடுகளை உள்ளடக்கி, கற்பித்தல் செயன்முறையில் ஆசிரியர்கள் ஈடுபடுதல் வேண்டும் என்பது புதிய கணித பாடத்தின் ஊடாக எதிர்ப்பார்கப்படுகின்றது. நேரடியாக,  கணிதத் துறை சார்ந்த வெவ்வேறு தொழில்களில் ஈடுபடுவதற்கான முதன்மையான அத்திவாரத்தை இடுவதும்,  ஏனைய பல்வேறு தொழில்கள் சார்ந்த மற்றும் நாளாந்த கருமங்களை செய்வதற்கு தேவையான கணிதத் திறன்களை வழங்குவதும் ஆரம்பக் கல்விப் பருவத்தினூடாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு பாடத்திற்காகவும் குறித்த தேர்ச்சிக்குரிய கற்றல் பேறுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு அக்கற்றல் பேறுகளின்பால் மாணவர்களை இட்டுச்செல்வதற்கு பொருத்தமான செயற்பாடுகள் அறிவுரைப்பு வழிகாட்டியில் தரப்பட்டுள்ளது. மாறாக குறித்த கற்றல் பேறுகளை எட்டுவதற்கு பொருத்தமான செயற்பாடுகளைத் தயாரித்துக் கொள்ளும் சுதந்திரம் ஆசிரியருக்கு உள்ளது.
1998 இன் ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமிட்ட விளையாட்டுக்கள், செயற்பாடுகள், இருப்பிடவேளை ஆகிய மூன்று முறைகள் தொடர்பாகவும் ஆசிரியர் சம அளவில் கவனம் செலுத்த வேண்டும். எனவே நீளம் அளத்தல் என்ற எண்ணக்கருவை இயற்கையுடன் இணைந்தும் தசைநார் பயிற்சிகளுடனுமே கற்பிப்பது மிகவும் பொருத்தமானது. இவ் அடிப்படையில் மேற்கூறிய விதத்தில் கற்பிப்பதன் மூலம் சகல மாணவர்களையும் இத்தேர்ச்சியை அடையச் செய்ய முடியும். 

1.2 பிரச்சினையை விளக்குதல்

ஆய்வாளரினால் செயல்நிலை ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட குறித்த மாணவனிடம் கணித எண்ணக்கருக்கள் தொடர்பான சில பிரச்சினைகள் நிகழ்நிலை வகுப்புக்களை நடாத்துவதற்கு முன்பதாகவும் வகுப்பறையில் காணப்பட்டன. இருப்பினும் நிகழ்நிலை ஊடாக நீளம் அளத்தல் என்ற எண்ணக்கரு தொடர்பான தேர்ச்சியை அடைந்து கொள்வதில் அதிகமான இடர்பாடுகளை நிகழ்நிலை வகுப்பினூடக எதிர்நோக்கினார். எனவே ஆய்வாளரால் கீழ்காணும் பிரச்சினைக் கூற்று தெரிவுசெய்யப்பட்டது.

பிரச்சினைக் கூற்று
நீளத்தை முறையாக அளப்பதிலும் அதனை அலகுகள் மூலம் குறித்துக் காட்டுவதிலும் இடர்படுதல்.
குறித்த மாணவன் நீளம் அளத்தல் தொடர்பான எண்ணக்கருவில் உரிய அடைவினை அடையாதவிடத்து இவர் அடுத்ததாக முதன்மைநிலை மூன்றில் எதிர்கொள்ள வேண்டிய புலமைப்பரிசில் பரீட்சையில் சில புள்ளிகளை இழக்க நேரிடும். அத்தோடு நீளம் அளத்தல் தொடர்பான அத்தியாவசிய கற்றல் தேர்ச்சியையும் அடைவதில் சிக்கல்படுவார். அத்துடன் உயர்வகுப்புக்களில் அளத்தல் தொடர்பான கணித எண்ணக்கருக்களை கற்பிக்க ஆசிரியர்கள் பிரச்சினையை எதிர்நோக்குவர். காரணம் குறித்த மாணவன் அளத்தல் தொடர்பாக ஆரம்ப வகுப்புக்களில் பெற்றிருக்க வேண்டிய அறிவை பெறாமையே ஆகும்.
அளத்தல் தொடர்பான எண்ணக்கருவானது பரீட்சைக்கு மாத்திரமின்றி வாழ்க்கையோடு இணைந்த அனைத்து செயற்பாடுகளிலும் பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகின்றது. அன்றாட வாழ்க்கை செயன்முறைகளின் போது நீளம் அளத்தலானது எதேச்சையான அளவுகளை கொண்டும் நியம அளவுகளைக் கொண்டும் நீளம், அகலம், உயரம் என்பவற்றை அளக்க நேரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அளக்கும்போது எதேச்சையான அளவுகள்இ நியம அளவுகளான சென்றிமீற்றர் மற்றும் மீறற்றரிலும் அளக்கும்போது அவற்றினை முறையாக கையாள வேண்டும். அதாவது சென்றிமீற்றர் , மீற்றர் கோல்களில் 
தொடக்கமுனை 
இறுதிமுனை 
குறிக்கப்பட்டுள்ள சென்றிமீற்றர் எண்ணிக்கை 
ஆகியன பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். எனவே ஆய்வாளரால் தெரிவு செய்யப்பட்ட குறித்த மாணவனும் மேற்கூறப்பட்ட அனைத்து பிர்சினைகளையும் எதிர்கொண்டமையால் ‘நிகழ்நிலை வகுப்பினூடாக நீளம் அளத்தல் திறனை மேம்படுத்தல்’ என்னும் இத்தலைப்பை தெரிவு செய்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இச்செயல்நிலை ஆய்வு மேற்க்கொள்ளப்படுகின்றது.

1.3 பிரச்சினையும் தொழில்சார் வகிபங்கும்

பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் சார்ந்த பிரச்சினைகள், நிலைமைகள் செயல்நிலை ஆய்வின் பொருளாகின்றன. அதன் நிமித்தம் கல்வி மார்க்கத்தைச் செப்பனிடல், மாணவர்களின் கற்றல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராய்ந்து வழங்கப்படும் உதவிகள், வழிகாட்டல்கள், அறிவுறுத்தல்கள் என்பன ஓர் ஆசிரியரின் வாழ்வினை பிரகாசிக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல் விஞ்ஞான ரீதியல் உதவும் தொழில்நுட்பமான செயல்நிலை ஆய்வுகளும் உள்ளன. இவை ஒரு சிறப்புமிக்க நல்லாலசிரியரின் அன்றாட நடவடிக்கையின் அம்சமாகவே பிரதிபலிக்க வேண்டும்.
வினைத்திறன்மிக்க செயற்பாடுகளைக் கொண்ட பாடசாலைகளைக் கட்டியெழுப்புவதற்கு செயல்நிலை ஆய்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கல்விச் செயன்முறை (Education
Process
)
 பாடசாலையில் நிர்வாகச் செயன்முறை (Administration
Process
)
 என்பவற்றில் புதிய பிரவேசங்களை இனங்காண இவ் ஆய்வு செயற்பாடுகள் உதவுகின்றன. எதிர்கால கல்வி தொடர்பான புத்தாக்கங்களின் போது பாடசாலை மட்டத்தில் செயல்நிலை ஆய்வுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் தேர்ச்சி படைத்தவர்களாக எல்லா ஆசிரியர்களும் உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது. புதிய நூற்றாண்டில், வகுப்பறைகளில் முகங்கொடுக்கவிருக்கும் சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு இச்செயல்நிலை ஆய்வு முக்கிய பங்கு வகிக்கின்றது.
அத்துடன் செயல்நிலை ஆய்வுகளைப் பிரயோகிக்கும் போது உயர்மட்ட திறன்களையும், தொழிற்சார்ந்த நிபுணத்துவத்தையும் வளர்த்துக்கொள்ள பெரு வாய்ப்புக்கள் கிடைக்கின்றது. இவ்வகையில் கல்விசார் செயல்நிலை ஆய்வுகள் கல்வியின் பல்பரிமாண விருத்திக்கு துணை நிற்கின்றன. ஆசிரியர்கள் வசமுள்ள கல்வி என்ற ஒளித்தாரை வாயிலாக பாடசாலை, வகுப்பறை, சமூகம் பூராகவும் வியாபித்துள்ள இருள் அகற்றப்பட வேணடும். அவர்களுடைய கல்வி வாழ்க்கையை விருத்திக்குரிய அம்சமாக்கி மிளிரச்செய்தால் அவர்கள் பாடசாலை வகுப்பறையை தம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்வர்.
அத்துடன் ஓர் ஆசிரியர்,  திட்டமிடுபவராகவும் முன்மாதிரியானவராகவும் வசதி அளிப்பவராகவும் மற்றும்  பிரச்சினை விடுவிப்பவராகவும் மாறுவதற்கு இச்செயல்நிலை ஆய்வு உதவுகின்றது. வாழ்க்கையின் உறுதியான ஆரம்பமாகவும், அத்திவாரமாகவும் ஆரம்பக்கல்வி உள்ளது. கல்விக்காக இடப்படும் மூலதனத்துக்கான கூடுதல் விளைவை ஆரம்பக்கல்வித் துறையே அளிக்கின்றது. எழுத்தறிவும் எண்ணறிவுமிக்க மக்களை உருவாக்குவதுடன் மேல்நிலைக் கல்விக்கும் வாழ்க்கை முழுவதுமான கல்விக்கும் உரிய வழியைத் திறந்து தற்கால தகவல் தொழிநுட்ப சகாப்தத்திற்குப் பொருந்தி வாழக்கூடிய கற்கும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஆதார மூலமாக ஆரம்பக்கல்வி அமைகின்றது.
ஆரம்பக்கல்வி உட்பட அடிப்படைக் கல்வியை குணச்சிறப்புடன் தமது குடிமக்கள் அனைவருக்கும் வழங்குவதை உறுதிசெய்த நாடுகள்,  அபிவிருத்தியின் சகல பரிமாணங்களிலும் கூடுதலான விளைத்திறனைப் பெற்றுள்ள உண்மையினை பல ஆய்வுகள் நிறுவியுள்ளன. கற்றல் கற்பித்தல் செயன்முறையின் பிரதான இலக்கு வகுப்பிலுள்ள சகல மாணவர்களினதும் அடைவு மட்டத்தை உயர்த்துவதாகும். இதனை எப்படிச் செய்வது என்பதுதான் கேள்வி. இதனை நிறைவேற்றுவதற்கு பல வழிகள் உண்டு. இன்று பாடசாலைக்குச் செல்லும் சிறார்களில் ஒரு சிலர் நன்மை அடைவதும் வேறு சிலர் நன்மை அடையாததுமே முக்கிய பிரச்சினையாக விளங்குகிறது. ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் விடயங்கள் சகல மாணவரையும் சென்றடைய வேண்டுமென பிரயத்தனம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் கற்பிப்பவை எல்லாம் சில மாணவர்களை சென்றடைவதில்லை.
இவ்வாறு சில மாணவர்கள் தாம் கற்பவற்றை விளங்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்? அவர்கள் ஆற்றல் குறைந்தவர்களாகவோ, மெல்ல கற்பவராகவோ, குறைபாடுடையவராகவோஇ ஊக்கல் பிரச்சினைகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் உடையவராகவோ இருக்கலாம். அதேவேளை மாணவன் ஒருவனிடம் காணப்படும் பலம், பலவீனங்களுக்கும் ஆசிரியர் பின்பற்றும் கற்றல் கற்ப்பித்தல் முறைகளுக்குமிடையே தொடர்பின்மை காணப்பட்டாலும் மாணவனின் அடைவு பாதிக்கப்படலாம்.
கற்றல் என்பது தனியாள் வேறுபாடு. கற்பித்தலும் அதற்கேற்பவே அமைய வேண்டும். பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டால் தனியாள் வேறுபாட்டுக்கமைய வகுப்பறைகளில் கற்பித்தல் என்பவற்றை நடைமுறைப்படுத்த இயலாவிடினும் குறித்த மட்டத்தினரையாவது இனங்கண்டு அவர்களுக்கான வெவ்வேறு கற்பித்தலை மேற்கொள்வதால் கூட நல்ல பயன்பாட்டினைப் பெற முடியும்.
கற்பித்தல் உபகரணங்களின் பயன்பாடு செயன்முறைக் கற்பித்தலில் பெரும்பங்கு வகிக்கின்றது. செயற்பாட்டு கற்பித்தலில் உபகரணங்கள், வினாவிடை, பிரச்சினைகள், கணித விளையாட்டுக்கள் என்பன இடம்பெறும். செயற்பாட்டு கற்பித்தல் முறையில் உபகரணங்களின் தொழிற்பாடும், கற்போன் செயற்பாடுகளையும் அனுபவ பூர்வமாக செய்யும்பொழுது அடிப்படைகளை தெளிவாக்கிக் கொள்ளவும், ஞாபகத்தில் வைத்திருக்கவும் வழி வகுக்கும். அதிகுறைந்த நுண்மதி உடையவர்களுக்கு செயற்பாட்டு கற்ப்பித்தல் முறை நல்ல பயனை அளிக்கும். அந்த வகையில் செயல்நிலை ஆய்வினை செயற்படுத்துவதன் மூலம் மாணவரும் ஆசிரியரும் பல நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர். இதன்மூலம் ஆய்வாளர் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவும்இ பாடரீதியாக நிகழ்நிலையில் மாணவனின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கவும்,  சமூகத்துடனான இடைவினைத் தொடர்பை அதிகரிக்கவும் ஆய்வாளனால் முடிகின்றது.

1.4 பிரச்சினை தொடர்பான நோக்கு

ஆய்வின் முக்கியத்துவம்

செயல்நிலை ஆய்வுகள் கற்பித்தலை வினைத்திறனாக மேற்கொள்வதற்கும் ஆசிரியர் வாண்மையை உயர்த்திக் கொள்வதற்கும் பேருதவி புரிகின்றன. அத்துடன் வகுப்பறைச் சூழலை உயிரோட்டமானதாக வைத்துக் கொள்வதற்கும் மாணவர் மத்தியில் சிறந்த அடைவுகளை ஏற்படுத்துவதற்கும் இவ்வாய்வு பெறும் பங்கு வகிக்கின்றது. அத்துடன் கற்றல் கற்பித்தல் நிலைகளில் புதிய பிரவேசங்களை ஏற்படுத்திக் கொள்ள இவ்வாய்வுகள் ஆசிரியர்களுக்கு பெரிதும் உதவுகின்றன.
இன்றைய கல்விமுறையில் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தம் செய்வதோடு மாணவர்களுக்கு வாழ்க்கையை கொண்டு நடாத்த தேவையான அறிவையும் அனுபவத்தையும் வழங்க வேண்டிய பொறுப்பு ஆசிரியரையே சாரும். ஆசிரியர் தனது கற்பித்தலை வெற்றிகரமானதாக்கி கொள்வதற்கும் மாணவர்களின் சூழல் அதனோடு தொடர்புபட்ட பிரச்சினைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதற்கும் ஆய்வானது பெரிதும் துணைபுரிகின்றது.
ஆய்வின் எதிர்ப்பார்ப்பு
ஆய்வாளர் இவ்வாய்வினை மேற்கொள்வதன் மூலம் ஆய்வுக்கு உட்படுத்திய குறித்த மாணவனின் பிரச்சினைகளாவன,
    * நிகழ்நிலை வகுப்பில் விருப்புடன் கலந்து கொள்ளாமை.
    * வினாக்களுக்கு விடையளிக்காமைஇ பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் இன்மை.
    * நீளம் தொடர்பான அலகுகளில் தெளிவின்மை
இப்பிரச்சினைகளிலிருந்து குறித்த மாணவனை மகிழ்ச்சிகரமான கற்றலில் ஈடுபடுத்துவதற்குரிய சாதகமான வீட்டுச்சூழல் மற்றும் சகபாடிக் கற்றல் என்பவற்றை விருத்தி செய்வதற்கும் ஆய்வாளரால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் ஆசிரியர் நிகழ்நிலை வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும்போது மாணவர்களிடத்தே ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயற்பாடுகளை திட்டமிடுதல் இச்செயல்நிலை ஆய்வின் மூலம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பார்க்கப்படும் ஆய்வின் தீர்வு
குறித்த மாணவன் நிகழ்நிலை வகுப்பில் ஆர்வமின்மை, அவதானம் குறைவாகக் காணப்பட்டமை, செவிமடுத்து கிரகிக்கும் தன்மையில் பின்தங்கிய நிலை என்பவற்றை சீர் செய்வது அவசியமாகும். அத்தோடு மாணவன் வாழும் வீட்டுச்சூழல் , பெற்றோரின் கல்வி நிலை, பெற்றோரின் பொருளாதார நிலை,  சகபாடிகளின் நிலை, கற்றலுக்கான வழங்கல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆய்வாளரால் மேற்கொள்ளப்படும்.

2.0 ஆய்வுப்பிரச்சினை தொடர்பான அடிப்படை விடயங்களை தேடி அறிதல்

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஒரு கஷ்டப் பிரதேச பாடசாலையே ம.மா/வ/பிளேலோமவுண்ட் தமிழ் வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலையில் 72 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இங்கு 06 ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். 
தற்போது இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் பெருந்தோட்டத் துறையில் தொழில் புரிகின்ற தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆவர். இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வெளிப்பிரதேசங்களில் இருந்தே இப்பாடசாலைக்கு தனது சேவைக்காக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேசத்திற்கான போக்குவரத்துப் பிரச்சினையானது பிரதேச மக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காணப்படும் முக்கிய பிரச்சினையாக கருதலாம். இப்பாடசாலைக்கு வரும் மாணவர்கள் கால்நடையாகவே பாடசாலைக்கு வருகின்றனர். இப்பாடசாலையின் ஏந்து பிரதேசங்களான பிளேலோமவுண்ட் கீழ்பிரிவு, பிலேளோமவுண்ட் மேற்பிரிவு, ரத்னோதாகம, தங்கமலை, மீப்பனாவ ஆகிய கிராமங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
பாடசாலை அமைந்துள்ள சூழல் மாணவர்களின் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு சாதகமான இடமாக அமைந்திருக்கின்றது. மேலும் ஆசிரியர்கள் சிறப்பான கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதற்கும் ஏதுவாக அமைந்திருக்கின்றது. இப்பாடசாலையை பொருத்தவரையில் கடந்த காலங்களில் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் 70 இற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று நூறுவீத அடைவினை பெறுகின்றமை பெருமைக்குரிய விடயமே ஆகும். இதற்கு காரணங்களாக அமைவது மாணவர்களை தனிப்பட்ட ரீதியில் ஆராய்ந்து கற்பித்தலுக்கு பொருத்தமான நுட்பங்களை பயன்படுத்தல் மற்றும் தனியாள் செயல்நிலை ஆய்வு என்பவற்றை குறிப்பிட முடியும்.
இருப்பினும் கொவிட் 19 என்ற தொற்று நோய் காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதால் இப்பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு அவ்வாறான மகிழ்ச்சிகரமான கற்றலில் ஈடுபட முடியாமை வருந்தக்கூடிய விடயமாகவே உள்ளது. எனவே இப்பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்களுக்கான கல்வியை நிகழ்நிலை வகுப்பினூடாகவே கற்பிக்கின்ற சந்தர்ப்பம் மாத்திரமே காணப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஆய்வாளரும் தனது வகுப்பு மாணவர்களுக்கு நிகழ்நிலையினூடாக கற்பிக்கின்ற போது பல பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிட்டது. அச்சந்தர்ப்பங்களின் போது கணித பாடத்தை கற்பிக்கும் வேளையில் செயற்பாட்டு ரீதியாக கற்ப்பிக்க வேண்டிய பல கணித எண்ணக்கருக்கள் காணப்பட்ட போதிலும் மாணவர்கள் நீளம் அளத்தல் என்ற பகுதியில் அதிக பிரச்சினைகளை எதிர்கொண்டனர். நிகழ்நிலை வகுப்பறையில் ஆய்வாளனால் தெரிவு செய்யப்பட்ட குறித்த மாணவன் கற்றலில் அதிக இடர்பாடுகளை எதிர்கொண்டமை பிரதிபலிப்புக் குறிப்புப் பதிவுகளிலிருந்து ஆய்வாளரால் அறிந்து கொள்ளப்பட்டது.
இப்பிரச்சினைக்கான ஆரம்பத் தேடல்களை அறிய முற்பட்டபோது ஆய்வாளரால் முதன்மையான பிரச்சினையாக நீளம் அளத்தல் தொடர்பான அடிப்படை தேர்ச்சிகளை பெற்றிருக்கவில்லை என்பதனை நிகழ்நிலை கலந்துரையாடலின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது. அத்தோடு இம்மாணவன் நிகழ்நிலை வகுப்பில் கலந்து கொண்டாலும் ஆசிரியரின் கற்பித்தலுக்கு கவனம் செலுத்தாமை குறிப்பிடத்தக்கது.
மாணவனின் வீட்டில் கற்றல் சூழல் குறைவாக காணப்பட்டமையானது குடும்ப சூழலில் பெற்றோரின் முறையான வழிகாட்டல் இல்லை என்பதனை எடுத்துக்காட்டியது. காரணம் குறித்த மாணவனின் தாயார் தமது தொழில் நிமித்தம் இடம்பெயர்ந்துள்ளார். தந்தை சுகவீனமானவர். குறித்த மாணவனுக்கு இரு சகோதரர்கள் உள்ளனர். எனவே மூன்று பிள்ளைகளையும் பாட்டியே பராமரித்து வருவதனால் பிள்ளைகளின் கற்றலுக்கு வீட்டுச் சூழலில் இருந்து எவ்வித உதவியும் கிடைக்கப்பெறவில்லை.
குறித்த மாணவனின் அடைவினை பரிசோதித்தபோது அம்மாணவன் நீளம் அளத்தல் தொடர்பான தேர்ச்சியினை அடைந்து கொள்வதில் அதிக பிரச்சினைக்கு உள்ளாகியிருந்தமையை அவதானிக்க முடிந்தது. எனவே ஆய்வாளரால் குறித்த மாணவனை கருத்திற் கொண்டு ‘நிகழ்நிலை வகுப்பினூடாக நீளம் அளத்தல் திறனை மேம்படுத்தல்’ என்ற தலைப்பினை செயல்நிலை ஆய்வுக்கான பிரச்சினையாகத் தெரிவுசெய்யப்பட்டது.

2.1 பிரச்சினை தொடர்பான ஆரம்ப தகவல்களை திரட்டுதல்

ஆய்வாளன் என்ற வகையில் தேசிய நோக்கங்கள் தேசிய குறிக்கோள்கள் என்பவற்றில் கணிதம் தொடர்பான எண்ணக்கருக்களில் தேர்ச்சியை அடையப் பெறச் செய்தல் ஆசிரியரின் கடமையாகும். நேரடியாக கணித துறை சார்ந்த வெவ்வேறு தொழில்களில் ஈடுபடுவதற்கான முதன்மையான அடித்தளத்தை இடுவதும், ஏனைய பல்வேறு தொழில்கள் சார்ந்த மற்றும் நாளாந்த கருமங்களைச் செய்வதற்குத் தேவையான கணிதத் திறன்களை வழங்குவதும் ஆரம்பக் கல்வியின் பணியாகும்.
அந்த வகையில் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் மாறி வருகின்ற புதிய உலகில் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. எத்துறையை ஆழ்ந்து நோக்கினாலும் கணிதம் என்ற பாடப்பிரிவில் அளத்தல் என்ற எண்ணக்கரு பல கிளைகளாக பிரிந்து தமக்கே உரித்தான முறையில் தேவைகளுக்கேற்க அவை பரிணமிக்கின்றன.
 
கணித பாடத்தை கற்பிப்பதற்கு வகுப்பறையில் கற்பித்தல் சாதனங்கள் என்ற வகையில் உருக்கள், வரைபடங்கள், சுவர்ச்சித்திரங்கள், எண்ணிகள், கணித உபகரணங்கள், முப்பரிமாணப் பொருட்கள், தளபாடங்கள் என இன்னோரன்ன கற்றல் சூழல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இவ் இடர்காலப் பகுதியில் நிகழ்நிலையினூடாக கற்பிக்கும் போது வகுப்பறை சூழலுக்கு ஒத்த வகையில் வீட்டுச்சூழல் காணப்படும் என்பது சாத்தியமற்றதாகும். 
எவ்வாறாயினும் மாணவனின் சூழலை கருத்திற் கொண்டு அச்சூழலை மாணவனுக்கு ஏற்ற வகையில் அமைத்து ஆசிரியர் தனது இலக்கை அடைவதும் மாணவன் அடைய வேண்டிய தேர்ச்சி மட்டத்தை அடைய வைக்கும் பொறுப்பும் ஆசிரியருக்குரியது. எனவே ஆசிரியர் கற்பிப்பது யாருக்கு? கற்பிப்பது எதனை? கற்பிப்பது எவ்வாறு? என்பதை மாணவரின் அடைவுகள் மூலம் இனங்காண்பதும் பரிகாரக் கற்பித்தலுக்கு மாணவரை ஈடுபடுத்துவதும் அவசியமானதொன்றாகும்.
கணித பாடம் கற்கும் சிறு பிள்ளைகளின் கணித எண்ணக்கருக்களினதும் திறன்களினதும் விருத்தி தொடர்பாக எந்நேரமும் கண்டறிதல் மிகவும் முக்கியமாகும். இவ்வாறான கண்டறிதல்களில் இருந்து, சேகரிக்கப்படும் தகவல்கள் மூலம் பிள்ளையின் முன்னேற்றம் தொடர்பாக விளக்கத்தைப் பெறுதல் போன்றே பிள்ளைக்குக் கணிதம் கற்கும் போது ஏற்படும் பிரச்சினைகள்இ இடர்பாடுகள் பற்றியும் ஆசிரியருக்கு விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே நீளம் அளத்தல் என்ற எண்ணக்கருவானது மாணவனின் கணிதத் திறன்களை வளர்ப்பதற்கும்இ தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்குவதற்கும், இடைநிலை மற்றும் உயர்கல்விக்கும் தொழிற்கல்விக்கும் அடித்தளமாக அமைகின்றது.
அன்றாட வாழ்க்கைக்கும் வேலை உலகிற்கும் மேலும் கற்பதற்கும் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்குப் பொருத்தமான அத்திவாரமொன்றை ஆரம்பப் பாடசாலைக் கட்டத்தில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான கணித தேர்ச்சிகளை வழங்க வேண்டிய கடப்பாடு ஆசிரியரிடத்தே உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.
அத்துடன் அறிவைத் தூண்டும் சந்தர்ப்பங்களின் ஊடாக மகிழ்ச்சி பெறுவதற்கு ஒழுங்கு செய்து கணிதத்தை மனங்கவர் பாடம் ஒன்றாக நிலைப்படுத்துதல் சகல ஆசிரியர்களினதும் கடமையாகும். எனவே நீளம் அளத்தல் என்ற எண்ணக்கருவை வளர்ப்பதற்கு வகுப்பறை செயற்பாடுகளை பாடநூலிற்கு மட்டும் வரையறுக்காமல் நிகழ்நிலை கற்றலின் ஊடாகவும் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் குறித்த தேர்ச்சியை அடைந்து கொள்ள முடியும்.
தரம் நான்கு ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படிஇ செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அனுபவங்களை பெற்ற பின்னரே பாடநூலில் தரப்பட்டுள்ள பயிற்சிகளின்பால் மாணவர்களை வழிப்படுத்த வேண்டும். எனவே இச்செயற்பாடுகளை நிகழ்நிலை கற்றலின் மூலம் ஆசிரியரின் நேரடி கண்காணிப்பின் ஊடாக மேற்கொள்ள முடியாமையால் குடும்பச் சூழலிருந்து உதவியைப் பெற்றுக் கொள்ள நேரிடுகின்றது.
நீளம் அளத்தல் என்ற எண்ணக்கருவை நிகழ்நிலையில் கற்பிக்கும் போது மாணவர் அமர்ந்த நிலை வேலையின் மூலமே கற்றல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் போது கற்றலில் பின்னடைவான மாணவர்கள் தனது சுயநம்பிக்கையை இழக்க நேரிடுகின்றது. இவ்வாறான மாணவர்களை சுய நம்பிக்கையுடன் செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்காகவே இவ் ஆய்வானது ஆய்வாளரால் முன்னெடுக்கப்படுகின்றது.

2.2 தரவு முக்கோணப்படுத்தல் மூலம் காரணிகளை அறிந்து கொள்ளல்

தரவுகளை முக்கோணப்படுத்தல் ஒரு நிகழ்வு அல்லது விடயம் தொடர்பாக நுட்பமுறைகளைப் பயன்படுத்தி கிடைக்கும் தகவல்களை ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்து பிரதான காரணியை அறிந்து கொள்ளல் ஆகும். தரவுகளை முக்கோணப்படுத்தலில் பின்வரும் விடயங்களை பிரதானமானவையாகக் குறிப்பிட முடியும்.
ஒரு நிகழ்வின் போது கிடைக்கின்ற அனுபவங்களை பகுப்பாய்வு செய்து பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்குரிய காரணிகளாக அவதானிப்புஇ நேர்காணல், ஆவணக்கற்றாய்வு என்பன முக்கியத்துவம் பெறுகின்றது.
அவதானிப்பு
அவதானிப்பு நேரடி அவதானிப்பு, மறைமுக அவதானிப்பு என இருவகையில் நோக்கலாம்.
1. நேரடி அவதானிப்பு
நிகழ்நிலை வகுப்பில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் போது ஆய்வுக்கு உட்படுகின்ற மாணவரை நிகழ்நிலையினூடாக நேரடியாக அவதானித்தல் நேரடி அவதானிப்பு எனலாம். அவ்வகையில் குறித்த மாணவனிடம் வழமைப்போல உறவைப்பேணுவது அவசியமாகும். தான் ஆய்வுக்கு உட்பட்டுள்ளேன் என்ற உணர்வு குறித்த மாணவரிடத்தில் ஏற்படுமாயின் ஆய்வின் நோக்கம் சிதறக்கூடிய வாய்ப்பு அதிகமாகும். இவ்வகையில் மாணவனை அவதானித்த போது பின்வரும் விடயங்கள் பெறப்பட்டன.
1. ஆசிரியருடன் கலந்துரையாடலில் ஈடுபடாமை.
2. வினாக்களுக்கு விடையளிக்காமை.
3. நீளம் தொடர்பான அலகுகளில் தெளிவின்மை.
4. பயிற்சிகளை செய்வதில் ஆர்வமின்மை.
5. பயிற்சிகளை பிழையாக செய்கின்றமை.
மேலும் குறித்த மாணவன் நிகழ்நிலை வகுப்பில் ஆர்வமின்மை, அவதானம் குறைவாக காணப்பட்டமை, செவிமடுத்து கிரகிக்கும் தன்மை குறைவு என்பன நேரடி அவதானிப்பு மூலம் இனங்காணப்பட்டது.
2. மறைமுக அவதானிப்பு
ஆய்வுக்குரிய குறித்த மாணவனை நிகழ்நிலை வகுப்பினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அல்லாது ஏனைய நேரங்களில் அவதானித்தல் மறைமுக அவதானிப்பு எனலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களாவன,
1. குறித்த மாணவனின் பெற்றோரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள்.
2. குறித்த மாணவனின் சகபாடிகளை தொடர்பு கொண்டு பெறப்பட்ட தகவல்கள்
3. இடர்காலத்துக்கு முன்பு வகுப்பறை செயற்பாடுகளின் மூலம் அவதானித்தவை.
4. நிகழ்நிலையின் மூலம் ஏனைய பாடங்களை கற்பித்த சந்தர்ப்பங்களின் போது
இவ்வாறான மறைமுக அவதானிப்புக்களை மேற்கொண்டபோது பின்வரும் விடயங்கள் ஆய்வாளரினால் கண்டறியப்பட்டன.
1. குறித்த மாணவன் அவரது பாட்டியின் வற்புறுத்தல் காரணமாகவே நிகழ்நிலை வகுப்பில் கலந்து கொண்டமை.
2. குறித்த மாணவனுக்கு கற்றலில் ஆர்வமின்மை.
3. ஆசிரியர் மாணவர் இடைத்தொடர்பு குறைவாக காணப்பட்டமை.
4. நிகழ்நிலை வகுப்பில் ஒலிவாங்கியை நிறுத்தி வைத்தல். 
5. நிகழ்நிலை வகுப்பில் வீடியோவை நிறுத்தி வைத்தல்.
ஆய்வாளன் என்ற வகையில் இவ் அவதானிப்பு முறை ஆய்வுக்கு முக்கிய பங்கினை வகித்தது.
நிகழ்நிலையினூடாக நேர்காணல் தரவுகள்
நேர்காணல் மூலம் குறித்த பிரச்சினை தொடர்பில் நேரடி அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். அதாவது யாதேனும் தோற்றப்பாடு தொடர்பாக ஆட்களின் நம்பிக்கைகள், மனப்பாங்குகள் மற்றும் நோக்கு தொடர்பான தரவுகளை பெறத்தக்க முறைகளில் ஒன்றாக நேர்காணலை குறிப்பிடலாம். இவ்வாய்வின் போது நிகழ்நிலையின் ஊடாக நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களாவன,
1. குறித்த மாணவனுடனான நிகழ்நிலையினூடான நேர்காணல்.
2. குறித்த மாணவனின் பெற்றோருடனான நேர்காணல்.
3. சகபாடிகளுடன் நிகழ்நிலையினூடான நேர்காணல்.
அவ்வகையில் குறித்த மாணவனுடனான நிகழ்நிலையினூடான நேர்காணலின் போது இம்மாணவனின் தந்தை வாகன விபத்தொன்றுக்கு உள்ளாகி கால் ஒன்று பாதிக்கப்பட்டு தனது தொழிலை இழந்து வீட்டில் இருக்கிறார். இதன் காரணமாக தாய் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிவதற்காக இடம்பெயர்ந்துள்ளார்.
குறித்த மாணவனும் அவரது இரு சகோதரர்களும் உட்பட மூவரையும் தனது பாட்டியே பராமரித்து வருவதாக இம்மாணவனின் தந்தையின் நேர்காணலிலிருந்து அறிய முடிந்தது. அத்தோடு அவர் மேலும் கூறுகையில் குறித்த மாணவன் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். தான் கூறுவதை கேட்பதில்லை பாட்டியின் கருத்துக்களையும் செவிமடுப்பதில்லை எனவும் கூறினார். 
ஆய்வாளரின் செயல்நிலை ஆய்வுக்காக குறித்த மாணவனின் தாயுடன் தொலைபேசியினூடாக உரையாடிய போது அவர் பின்வருமாறு கூறினார். “தன் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காகவே வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளதாகவும் அவர் வீட்டில் இல்லாதபோது தனது மகன் வீட்டில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைவு” என்றும் கூறினார். அத்தோடு பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக ஈடுபாடு காட்டுவதாகவும் கூறினார்.
வீட்டில் கற்றலுக்கான சூழல் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தும் குறித்த மாணவன் அதனை பயன்படுத்த தவறுகின்றான். அதாவது நிகழ்நிலை வகுப்புகளுக்கு தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் அதனை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை எனவும் அத்தாயார் கூறினார். அத்துடன் வீட்டில் காணப்படும் பொருளாதார சிக்கல் காரணமாக தான் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்றிருப்பதால் தனது மகன் தொடர்பாக சிரத்தைக் காட்டுவதற்கு தன்னால் இயலவில்லை என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
குறித்த மாணவன் நிகழ்நிலை வகுப்பில் கலந்து கொள்ளாத சந்தர்ப்பம் ஒன்றில் அயல்வீடுகளில் வசிக்கின்ற சகபாடிகள் இருவரிடம் தொலைபேசியினூடாக விசாரித்த போது குறித்த மாணவன் தனது பாட்டியிடம் நிகழ்நிலை வகுப்புக்கள் இன்று இல்லை என்று கூறி பாட்டியை நம்பவைப்பதாகவும் சகபாடிகள் கூறினர். அத்துடன் தன்னிடமுள்ள கைப்பேசியை பயன்படுத்தி பொழுதுபோக்கு விiயாட்டுக்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் குறித்த மாணவன் கொவிட் 19 இடர்காலத்துக்கு முன்பதாக வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளின்போதும், காலைக்கூட்டத்தின் போதும், ஏனைய நிகழ்வுகளின் போதும் சில அறிவுறுத்தல்களை கவனத்தில் கொள்ள மாட்டார். மற்றும் குழுச்செயற்பாடுகளின் போதும் குழுவாக இயங்காமை, மெதுவாக செயற்படுதல், ஏனையவர்களுடன் குறைந்த அளவில் இடைவினை தொடர்பு கொள்ளல் என ஆய்வாளரால் அவதானித்த விடயங்களுடன் ஆய்வுக்கான தரவுகள் முக்கோணப்படுத்தப்பட்டது.
ஆவணக்கற்றாய்வு தரவுகள்
தகவல்களை திரட்டுவதற்காக எழுதிவைக்கப்பட்ட ஆவணங்கள், அறிக்கைகள், பதிவேடுகள் ஆகியவற்றை கற்றாய்ந்து அவற்றில் அடங்கியுள்ள தரவுகளை நுணுகி ஆராய்ந்து பிரச்சினை தொடர்பான தரவுகளை பெறுவதே ஆவணக்கற்றாய்வு எனப்படும்.
இச்செயல்நிலை ஆய்வுக்காக தரம் 04 நிகழ்நிலை வகுப்புக்களை நடாத்திய வரவு இடாப்பு, புள்ளிப் பதிவேடுகள், பிரதிபலிப்புக் குறிப்புகள், பயிற்சி புத்தகங்கள், புலனம் ஊடாக வழங்கப்பட்ட செயற்பாடுகள் என்பவற்றிலிருந்து தரவுகள் பெறப்பட்டன. இவற்றிலிருந்து பின்வரும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டன.
1. அடைவுமட்டம் குறைவாக காணப்பட்டமை
2. பயிற்சிகளை முறையாகவும் ஒழுங்காகவும் செய்யாமை.
3. அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறுதல்.
4. அலகுப் பரீட்சைகளில் புள்ளிகள் குறைந்த மட்டத்தில் காணப்படல்.
5. எண்களை தெளிவாக எழுதாமை.
6. மனக்கணித பிரசினங்களுக்கு விடை கூறாமை.
7. வினாக்களுக்கு விடை கூறாது மௌனமாக இருத்தல்.
8. கற்றலில் ஆர்வமின்மை.
9. நிகழ்நிலை வகுப்புகளுக்கு சமூகமளிப்பதில் அசமந்தப் போக்கு.
10. தொடர்ச்சியாக ஒரு செயற்பாட்டடில் ஈடுபடமுடியாமை.
11. விடயங்களை விளங்கிக் கொள்ள முடியாமை.
12. அறிவறுத்தல்களுக்கு ஏற்ப துலங்காமை.
மேற்படி விடயங்கள் நேர்காணல் ஊடாகவும் நிகழ்நிலை வகுப்புக்களின் ஊடாகவும் நேரடி அவதானிப்பு, மறைமுக அவதானிப்பு மூலம் ஆவணக்கற்றாய்வு தரவுகளின் மதிப்பீட்டின் படி இச்செயல்நிலை ஆய்வுக்குரிய தரவுகள் முக்கோணப்படுத்தப்பட்டன.

2.3 காரணிகளுடன் தொடர்பான கல்விசார் தேடல்

கல்வி சார் தேடலினூடாக ஆய்வை திட்டமிடல்இ தகவல் சேகரித்தல், செயற்படுத்தல்இ தொடக்க மூலங்களை இனங்காணல், இணையத்தளத்திலிருந்து தகவல்களை பெற்றுக் கொள்ளல் அத்துடன் ஆய்வு விடயத்துடன் தொடர்புடைய நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள், எழுத்தாக்கம் போன்ற பல்வேறு முறைகளின் மூலம் இலக்கிய மீளாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
ஆய்வு விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னைய ஆய்வுகள் பற்றிய கருத்துக்களும் அவை பற்றிய மதிப்பீடும் ஆய்வாளரை நியாயப்படுத்தும். அத்துடன் வெறுமனே பெறப்படுகின்ற தகவல் தொகுதிகள் ஆகிவிடாது. அவை பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதாகவும் பொருத்தமான வழிகாட்டலை ஆய்வாளருக்கு செய்கின்றதாகவும் இடம்பெறுதலே முக்கியமானதாகும். இதன் வழியாக கீழ்வரும் அனுகூலங்களை பெற முடிகின்றது.
ஆய்வாளரின் பிரச்சினை அல்லது எண்ணக்கரு தொடர்பான தெளிவு.
பொருந்தக்கூடிய ஆய்வு முறையியல், ஆய்வுக்கருவி, மாதிரிகள் எம்முடைய ஆய்விற்கு பயன்படுத்தலாம் என்பதற்கான வழிவகைகளை பெறக்கூடியதாக இருத்தல்.
ஆய்வு தொடர்பான இடைவெளிகளை அடையாளம் காணல்.
எடுத்துக் கொண்ட ஆய்வுப் பிரச்சினை தொடர்பான இன்றைய நிலையினைஇ தகவல்களை அறிதல்.
பொருத்தமான ஆய்வுப் பிரேரணைகளை முன்மொமொழிவதற்கு உதவியாக இருத்தல்.
மேற்குறிப்பிட்ட அனுகூலங்களை பெறுவதன் மூலம் கல்விசார் தேடலானது முக்கிய விடயமாக கருதப்படுகின்றது. ஆய்வை மேற்கொள்ளும் எந்தவோர் ஆய்வாளனுக்கும் தனது ஆய்விற்குட்பட்ட விடயம் அது தொடர்பான முன்னைய ஆய்வாளர்கள், ஆய்வு வரையரைகள், ஆய்வு பிரதேசம் தொடர்புடைய ஆய்வுகள், கல்வியலாளர்களின் கோட்பாடுகள், கருத்துக்கள் போன்ற விடயங்கள் அத்தியாவசியமாகும். 
இலக்கிய மீளாய்வு என்பது ஆய்வாளர் தான் எடுத்துக்கொண்ட ஆய்வுப் பிரச்சினை சார்பாக பொருத்தமான பின்புலத்தை பெற்றுக்கொள்ளும் போது தனது ஆய்வு பிரச்சினையோடு தொடர்பான பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள், ஆய்வுகள் என்பவற்றை இனங்கண்டு மீளாய்வு செய்து ஆழக்கற்றலாகும்.
ஆராய்ச்சிகளானது தெரியாத பல உண்மைகளைச் சான்றாதாரங்களின் துணையுடன் கண்டறிகின்றன. ஆய்வுகளிலிருந்து உண்மை நிலைகளைச் சரியாக புரிந்து கொள்ளவென நவீன ஆய்வு முறைகள் நன்கு செம்மைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இன்று கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் போன்றோரும் ஆய்வுப் பணி தெரிந்தவர்களாய்,  ஆய்வாளர்களாகவும் விளங்குதல் வேண்டும் என்பதால் அவர்களுக்கு ஆய்வு முறையியலிலும் ஓரளவு பயிற்சி வழங்கப்படுகின்றது. (சந்திரசேகரன் சோ. 2017)
ஆரம்பக் கல்வியில் கணிதமானது சிந்தனைத் திறனை வளர்ப்பதாகும். இளமையில் மூளையின் செயற்பாட்டிற்கு கணிதமே அடிப்படையாக அமைகின்றது. கணிதம் எண்கள் சார்ந்த விடயம் மாத்திரமன்றி வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைவரும் சந்திக்கும் ஒரு வாழ்வாதாரச் செயலொழுங்காகும் அச் செயலொழுங்கை எண்களினூடாக கணிப்பிடுதலைக் கணிதமாகக் காண்கின்றோம். எனவே கணிதச் செய்கைகளினூடாகச் சிறுவர்கள் கணிதம் கற்கச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். (தணிகாசலம்பிள்ளை ச.நா, ஆரம்பக்கல்வி. 2008)
பிள்ளையை ஊக்குவிப்பதில் ஆசிரியரின் மனப்பான்மை மிக மக்கியமாக கருதப்படும் அதே வேளை பிரயோசனமான வகுப்பறை நடைமுறைக்கு மேற்படி மனப்பான்மைகளைக் கொண்டு செல்வதற்கு பல்வேறு நுட்பங்கள் உள்ளன. இவ்வகையில் எமது பிரதான நோக்கம் பிள்ளையின் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புவதாகும். அதற்கான இரண்டு செயன்முறைகள் பின்வருமாறு:
1. தவறுகள்இ குறைபாடுகளை இழிவு நிலைக்கு கொண்டு வந்து பிள்ளையின் சுயபலத்தைக் கட்டியெழுப்புதல்.
2. முடிவையன்றி செயற்பாட்டை வலியுறுத்துதல். செயன்முறை என்பது விளைவு அல்ல. ( பக்கீர் ஜஃபார் ப.கா, 2009)
புலனங்களை பயிற்றுதலும் புலனாய்வுக் கற்றலும்

கற்றலுக்கு அடிப்படையாக புலனங்கங்களைப் பயிற்றுதல் தொடர்பாகவும் புலன்களைப் பயன்படுத்தி கற்றலில் ஈடுபடுதல் தொடர்பாகவும் கல்வித் தத்துவவியலாளர்கள் விதந்துரைத்துள்ளனர். இயற்கைவாத கல்வித் தத்துவ ஞானியாகிய ரூசோ அவர்கள் பிள்ளைப் பருவத்திற்குரிய செயற்பாடுகளில் ஒன்றாக புலனங்கங்களுக்குப் பயிற்சியளித்தலைக் குறிப்பிடுகின்றார். அவரது கருத்தின்படி    5- 12  வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் பிள்ளைப்பருவத்தில் பிள்ளைகளது கண்கள், காதுகள், கைகள், கால்கள் ஆகியனவே பிள்ளையின் முதல் ஆசிரியராகும். பிள்ளைத் தனது புலனங்கங்களைப் பயன்படுத்தி இயற்கையுடன் தொடர்பு கொண்டு தனது அனுபவங்களைக் கட்டியெழுப்புவதன் ஊடாக சூழலுடன் இயைபாக்கமடையும் திறனைப் பெற்றுக்கொள்கிறது. (நிர்மலாதேவி நல்லையா 2010)
பிரயோகக்கற்றல்
இன்றைய உலகில் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கவர்ச்சிகரமான கற்றல் முறையாகப் பிரயோகக் கற்றல் முறைமை காணப்படுகின்றது. குற்றச் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற மாணவன் ஒருவன் தன் கற்றல் செயற்பாட்டோடு தொடர்புபட்ட பொருட்கள், சாதனங்களைப் பயன்படுத்தி (பிரயோகித்து) கல்வி கற்கின்ற முறைமையையும், அல்லது மாணவனின் கற்றல் செயற்பாட்டுக்குப் பொருத்தமான பொருட்கள் சாதனங்களை பயன்படுத்தி ஆசிரியர் மாணவருக்குக் கல்வி கற்பிக்கின்ற முறைமையையும் நாம் பிரயோக கற்றல் எனக் கூறலாம். (சுபாகரன் எஸ்.பி. 2009)
கணித அறிவையும் திறன்களையும் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு கருமங்களின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிதமும் பயன்படுத்த வேண்டியேற்படுவதுண்டு. எனவே கணித எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் தொடர்பான தெளிவான அறிவையும் கணிதச் செய்கைகள் தொடர்பான திறன்களையும் பெற்றிருப்பது தற்காலச் சமூகத்தில் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவையாக உள்ளன. கணித்தல், அளத்தல், எண் சார்ந்த தகவல்களை ஒழுங்குபடுத்தலும் பகுப்பாய்வு செய்தலும்,  மதிப்பிடல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல்,  தர்க்க ரீதியல் சிந்திக்கப் பழகுதல்,  தீர்மானமெடுத்தல் போன்றவை அவ்வாறான சந்தர்ப்பங்களுக்கான சில உதாரணங்களாகும். எனவே,  பாடசாலைக் கலைத்திட்டத்தில் கணித பாடம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. (ஆசிரியர் வழிகாட்டி தரம் 04. 2019)

2.4 ஆய்விற்கு அடிப்படையான எண்ணக்கரு வரைபடம்

செயல்நிலை ஆய்வின் போது பிரச்சினை தொடர்பான அடிப்படை தேடலில் அறிந்து கொண்ட காரணிகளை கல்விசார் தேடல் மூலமாக தேடி அறிந்த விடயங்களுடன் இணைத்து பொருத்தப்பாட்டினை விளங்கிக் கொள்வதற்கு ஆய்வுக்கு அடிப்படையாக எண்ணக்கரு வரைபடம் ஏதுவாக அமையும்.

3.0 ஆய்வு செயன்முறையைத் திட்டமிடுதல்

நிகழ்நிலை வகுப்பினூடாக ஆரம்பக் கல்வியில் முதன்மை நிலை இரண்டில் தரம் 04 வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்தை கற்பிக்கும் சந்தர்ப்பத்தில் செயற்பாட்டு ரீதியாக கற்பிக்க முடியாமை பெறும் சவாலாகவே காணப்பட்டது. எனவே ஆய்வாளனால் எழுதப்பட்ட பிரதிபலிப்பு குறிப்புகளில் இருந்து பல பிரச்சினைகளை இனங்கண்ட போதும் நீளம் அளத்தல் என்ற எண்ணக்கரு பெரும் பிரச்சினையாகவே காணப்பட்டது. தரம் 04 இல் மெல்லக் கற்கும் மாணவனுக்கு இவ்வெண்ணக்கரு சென்றடையவில்லை என்பதை கணிப்பீடுகளில் இருந்து ஆய்வாளர் தெரிந்து கொண்டார்.  கணிப்பீட்டு பரீட்சையை அடிப்படையாக கொண்ட நிரல் வரைபு பின்வருமாறு,
வரைபடம் 3.0 : முற்சோதனைக்காக வழங்கப்பட்ட பயிற்சிகள்
எனவே இக்காரணங்களை கருத்திற்கொண்டு ஆய்வாளனால் குறித்த மாணவனை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. குறித்த மாணவனை இவ்வாய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அவர் நீளம் அளத்தல் என்ற எண்ணக்கருவில் தேர்ச்சியை அடையச் செய்ய முடியும் என்பது ஆய்வாளரின் திடசித்தமாக கொள்ளப்பட்டது. எனவே குறித்த மாணவனின் வீட்டுச் சூழல், பெற்றோரின் நிலைப்பாடு, தொழினுட்ப வசதி, மாணவனின் கவனமின்மைக்கான காரணம், சகபாடிகள் விபரம் என்பவற்றை தொலைபேசி ஊடாகவும் நிகழ்நிலை வகுப்புகளினூடாகவும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு பெற்றுக்கொண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செயன்முறை திட்டமிடப்பட்டது.

3.1 செயற்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்த நோக்கங்கள்

நீளம் அளத்தல் தொடர்பான எண்ணக்கருவானது ஆரம்பக் கல்வியில் பெற வேண்டிய தேர்ச்சிகளில் முக்கியமானதொன்றாகும். இத்தேர்ச்சியை மாணவர்கள் ஆரம்பக்கல்வியில் அடையாவிட்டால் அவர்களின் அடைவுமட்டத்தில் பின்னடைவது மட்டுமன்றி புலமைப்பரிசில் பரீட்சையிலும் புள்ளிகளை இழக்க நேரிடும். அதுமட்டுமன்றி ஆரம்பக்கல்வியினைப் பூர்த்தி செய்து இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வியிலும் நீளத்தோடு தொடர்புபட்ட பாடங்கள் உள்ளன. உதாரணமாக கணிதம், விஞ்ஞானம், புவியியல் எனப் பல்வேறு பாடங்களுடன் இவ் எண்ணக்கரு இணைந்ததாகவே உள்ளது. அத்துடன் வாழ்வியலோடு தொடர்புபடுத்தும்போது அனேகமான செயற்பாடுகளுடன் நீளம் அளத்தல் என்ற செயற்பாடு ஒருமித்து காணப்படுகிறது.
எனவே இவ்வாறான நீளம் அளத்தல் பயிற்சிகளில் ஆரம்பக் கல்வியில் தேர்ச்சி அடையச் செய்வதன் மூலம் ஆய்வுக்கு தெரிவுசெய்யப்பட்ட குறித்த மாணவன் எதிர்நோக்கவிருக்கும் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற வழி சமைக்கும். அத்துடன் வெற்றிகரமான வாழ்க்கைக்கும் பயனுடையதாக அமையும். இக்காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாளரால் “நிகழ்நிலை வகுப்பினூடாக நீளம் அளத்தல் திறனை மேம்படுத்தல்” எனும் தலைப்பு தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்செயல்நிலை ஆய்வின் மூலம் மேற்கண்ட பிரச்சினையை இழிவளவாக்க முயற்சி எடுக்கப்பட்டது. இவ்வாய்வுக்கு அடிப்படையாக அமைந்த நோக்கங்கள் பின்வருமாறு,
நீளம் பாய்தல் விளையாட்டின் மூலம் நீளம் அளத்தல் தொடர்பான எண்ணக்கருவை விருத்தி செய்தல்.
நீளம் அளத்தல் செயற்பாடுகள் மூலம் மாணவனிடத்தில் தசைநார் பயிற்சிகளை விருத்தி செய்தல்.
நீளம் அளத்தல் என்ற எண்ணக்கருவுடன் கூடிய செயற்பாடுகளுக்கு விருப்புடன் முன்வரச் செய்தல்.
ஆக்கபூர்வமான விதத்தில் எதேச்சையான அலகுகளைக் கொண்டு நீளம் அளக்கும் திறனை விருத்தி செய்தல்.
சென்றிமீற்றர்கோல் மற்றும் மீற்றர்கோல் என்பவற்றைக் கொண்டு அளக்கும் திறனை விருத்தி செய்தல்.
நீளம் அளத்தல் தொடர்பான நியம அலகுகளை பயன்படுத்தும் திறனை மேம்படுத்தல்.
சென்றிமீற்றர்,  மீற்றர் நியம அலகுகளைப் பயன்படுத்தி நீளத்தை அளந்து குறிக்கும் திறனை விருத்தி செய்தல்.
நீளம் அளத்தல் தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்கும் திறனை விருத்தி செய்தல்.

3.2 தலையிடலின் அடிப்படைச் செயற்பாடுகள்

3.3 தலையீட்டின் அடிப்படைத் திட்டத்தை தயாரித்தல்

ஆய்வாளரால் தெரிவுசெய்யப்பட்ட குறித்த மாணவனின் கணிப்பீடுகளில் இருந்தும் பிரதிபலிப்புக் குறிப்புகளில் இருந்தும் பெற்றுக்கொண்ட தகவல்களின்படி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்பதற்கு செயற்பாட்டு அட்டவணை ஒன்று தயாரிக்கப்பட்டது. இச்செயற்பாட்டு அட்டவணை 03 செயற்பாடுகளாகவும் 07 துணைச்செயற்பாடுகளாகவும் ஆய்வுக்கு உட்படுத்திய மாணவனுக்கு வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 
முதலாம் செயற்பாட்டில் 03 துணைச்செயற்பாடுகளை திட்டமிட்டு வழங்குவதன் மூலம் எதேச்சையான அலகுகளைக் கொண்டு நீளம் அளப்பதற்கு பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டது. நிகழ்நிலையினூடாக நீளத்தை அளக்கும் திறனை விருத்தி செய்யும் செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் திட்டமிடப்பட்டது. இச்செயற்பாடுகளில் இருந்து அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப எதேச்சையான அலகினைக் கொண்டு நீளத்தினை அளக்கும் திறனைப் பெறுவார் என்ற நடத்தை மாற்றத்தை எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் செயற்பாட்டில் இரண்டு துணைச் செயற்பாடுகளை திட்டமிட்டு வழங்குவதன் மூலம் cm ஐ பயன்படுத்தி நீளம் அளப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நியம அலகான cm கொண்டு நீளம் அளக்கும் திறனை விருத்திசெய்தல் என்ற உத்தேச இலக்காக இச்செயற்பாடு அமைந்தது. cm  மூலம் நீளத்தினை அளந்து கூறுவதோடு குறிக்கும் திறனையும் பெறுவார் என்ற நடத்தை மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மூன்றாம் செயற்பாட்டில் இரண்டு துணைச்செயற்பாடுகளைக் கொண்டு மீற்றரை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. நீளம் அளப்பதற்கு இச்செயற்பாட்டை வழங்குவதன் ஊடாக நியம அலகுகளை பயன்படுத்தப்படும். மீற்றர், சென்றிமீற்றர் என்ற நியம அலகுகளை பயன்படுத்தி நீளத்தை அளக்கும் திறனை விருத்தி செய்தல் என்பதை உத்தேச இலக்காகக் கொள்ளப்படுகிறது. இச்செயற்பாடுகளிலிருந்து மீற்றர் அலகைக் கொண்டு நீளத்தை அளந்து கூறும் திறனைப் பெறுவார். மற்றும் எழுதும் திறன் என்ற நடத்தை மாற்றத்தை குறித்த மாணவனிடமிருந்தே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட  செயற்பாடுகளின் மூலம் குறித்த மாணவன் நீளம் அளத்தல் தொடர்பான தேர்ச்சியை அடையாதவிடத்து இரண்டாம் வட்டத்தில் செயற்பாடுகளை செயற்படுத்தவும் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் வட்டத்திலும் மாணவன் இடர்படுவானாயின் பிரதிபலிப்புக்களை அவதானித்து மூன்றாம் வட்டத்தில் திட்டத்தை அமுல்படுத்த ஆய்வாளரால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

3.4 ஆய்வு ஒழுக்கக் கோவை

செயல்நிலை ஆய்வுகள் நிஜ உலகில் நடத்தப்படுகின்றமையால் தகவல் சேகரிக்கும் போதும் பெற்ற தகவல்களைப் பயனபடுத்தும் போதும் தீர்வினை வழங்கத் தலையிடும் போதும் கண்டறிந்தவற்றை பகிரும் போதும் ஆராய்ச்சியாளர்கள் பின்பற்ற வேண்டிய விஞ்ஞானப் பூர்வ நடைமுறையே ஆய்வு ஒழுக்கக் கோவையாகும்.
கல்வியியல் ஆய்வானது மனிதர்களுடன் தொடர்புபட்டது எனவே, அது தனிமனிதனது விருப்பு வெறுப்புக்கள் மற்றும் உணர்வுகளுடனும் தனிமனித உரிமையுடனும் சீண்டுவதாகவும் அமைய வாய்ப்புண்டு. எவ்வாறெனினும் ஆய்வுச் செயற்பாடானது ஒரு தனி மனிதனின் உரிமையில் அவரது உளப்பூர்வமான ஒப்புதலின்றி எவ்வகையிலும் தலையிடுவதாக அமைதல் முறையன்று. இதன்காரணமாக ஆய்வுக்குட்படுபவர் அல்லது தகவலாளியின் ஒப்புதல் பெறப்படுதல் ஒரு சிறந்த ஆய்வு பண்பாகும்.
மேலும் ஒப்புதல் செய்யப்பட்டிருப்பினும் கூட அவர் சார்பான பிரத்தியேகம், அனாமதேயம், இரகசியம் ஆகிய மூன்று விடயங்களையும் உறுதிப்படுத்துதலும் அவசியமாகவும். ஆய்வு ஒன்றில் பங்குபற்றுவதற்கு மறுப்பு தெரிவிப்பதற்கோ அல்லது ஆய்வு தொடங்கப்பட்ட பின்னர் இடையிலே தன்னை விளக்கிக் கொள்வதற்கோ தீர்மானிப்பதற்கான சுயநிர்ணய உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதனையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தகவலாளி ஒருவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் அவரை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் பட்சத்தில் இது பற்றி அவருக்கு உரிய வேளையில் உரிய முறையில் தெரிவித்துக் கொள்ளுதல் ஒரு சிறந்த ஆய்வுப் பண்பாகும்.
பெரும்பாலான கல்வி சார் ஆய்வுகளில் மாணவரிடமிருந்து தகவல்கள் திரட்டப்படுகின்றன. இவர்கள் சிறுவர்கள் தானே எனவே இவர்களிடம் ஆய்வுத் தொடர்பாக ஒப்புதல் பெறப்படுதல் அவசியமல்ல என்கின்ற மனோபாவம் எழுவதும் உண்டு. எனினும் ஒருவருடைய வயது அவரது உரிமைகளைக் குறைத்துவிடக் கூடாது எனும் கோட்பாட்டுக்கு அமைவாகப் பொருத்தமான முறையில் முன் அனுமதி பெறல் என்பன அவசியமாகின்றன.
சிலவகையான தரவு சேகரித்தல் உத்திகளைப் பயன்படுத்தும்போது தகவல்கள் சேகரிப்பு நடப்பது பற்றி முன்கூட்டியே தகவலாளி அறிந்து கொள்வதால்,  தூய தரவுகளைப் பெற முடியாமல் போகலாம். உண்மைத் தகவல்களைப் பெற வேண்டுமாயின் தகவலாளி சில விடயங்களை அறிந்திருக்கக்கூடாது. இது ஒரு சிக்கலான விடயமே.
சில ஆய்வுகளினால் தகவலாளிக்கு பாதிப்போ அல்லது ஆபத்தோ அதிகளவில் விளைந்திருக்கக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் ஆய்வு பெறுபேறுகளின் சமூக நலன் கருதியும் தகவல் தருவோரிடம் முன் அனுமதியோ ஒப்புதலோ பெறவேண்டும் எனும் நிலைப்பாட்டினை வலுவாக வலியுறுத்தாது தேவைக்கேற்ப தளர்த்திக் கொள்ளலாம் என்பது சமூகவியல் ஆய்வாளர் சிலரின் கருத்தாகும்.
எவ்வாறாயினும் தேவையற்ற வகையில் தனிநபர் சார்ந்த தகவல்களை தகவலாளியின் ஒப்புதல் இன்றி வெளிப்படுத்தும் நம்பிக்கை விரோதச் செயலையும் ஆய்வு பற்றிய சில விபரங்களைத் திட்டமிட்டுத் தகவலாளியிடமிருந்து மறைத்துக் கொள்ளும் கபடச் செயலையும் ஆய்வாளர் தவிர்த்துக் கொள்ளுதல் ஒரு சிறந்த ஆய்வு அறமாகும்.
ஒரு சிறந்த ஆய்வாளருக்குரிய சகல பண்புகளுடனும் எவரும் பிறப்பதில்லை. அனுபவத்தை முதலீடாகக் கொண்டு இப்பண்புகளை எவரும் தம்மிடம் விருத்தி செய்துவிட முடியும். ஆய்வுப் பெறுபேறுகள் திருப்திகரமாக அமைவதற்கு ஆர்வம்,  விடாமுயற்சி,  கடுமையான உழைப்பு,  தோல்வி கண்டு தளராத உளவலிமை போன்ற இயல்புகள் ஆய்வாளரிடம் காணப்பட வேண்டும்.

3.5 ஆய்வின் வரையறைகள்

செயல்நிலை ஆய்வுகள் உண்மை உலகில் நடத்தப்படுகின்றமையால் உள்ளதை உள்ளவாறே காட்டுவது ஒரு பிரச்சினையாக அமைய இடமுண்டு. எனவே ஆராச்சியாளர்கள் தனது ஆராய்ச்சி செயற்பாடுகளின் போது விதித்துக் கொள்ளும் வரையறைகளே ஆய்வுக்கான மட்டுப்பாடுகளாகும்.
ம.மா.வ/பிளேலோமவுண்ட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் ஒரு மாணவனை உள்ளடக்கியே இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. நீளம் அளத்தல் தொடர்பான திறனைப் பெறல் இவ் ஆய்வின் மூலம் எதிர்ப்பார்க்கப்டும் விளைவாகும். இவ் ஆய்வு 2021 யூன் மாதம் தொடக்கம் 2021 நவம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்படும்.

3.6 தலையிடலின் ஆரம்ப திட்டத்தினை செயற்படுத்திய விதமும் பிரதிபலிப்பும்

ஆரம்பக் கல்வியில் கணிதம் கற்பித்தல் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செயற்பாடுகளின் போது மாணவர்களின் நுண் தசைநார் பயிற்சி,  பெரும் தசைநார் பயிற்சி என்பன விருத்தியடைகின்றன. ஆய்வாளரால் தெரிவுசெய்யப்பட்ட குறித்த மாணவனிடம் தசைநார் பயிற்சிகளின் விருத்தி குறைவாக காணப்பட்டமை பிரதிபலிப்புக் குறிப்புக்கள் மூலமும் மாணவன் செயற்பாடுகளில் ஈடுபடும் போதும் ஆய்வாளனால் அவதானிக்கப்பட்டது.
ஆய்வாளனால் சேகரித்த தகவல்களிலிருந்து குறித்த மாணவனுக்கு முதலில் தசைநார் பயிற்சிகளை வழங்கும் செயற்பாடுகளை செயற்படுத்தப்பட்டது.
1. பெரும் தசைநார் பயிற்சி செயற்பாடுகள்
2. நுண் தசைநார் பயிற்சி செயற்பாடுகள்
கொவிட் 19 இடர்காலப் பகுதியில் குறித்த மாணவன் வீட்டிலிருந்து விளையாட்டில் அதிக ஆர்வத்தை காட்டுவதாக தரவு பகுப்பாய்விலிருந்து தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கேற்ப இம்மாணவனை விளையாட்டினூடாக தனது கற்பித்தல் செயற்பாட்டை ஆய்வாளர் ஆரம்பிக்க உத்தேசித்தார். அச்செயற்பாட்டினை செயற்படுத்துவதற்கு குறித்த மாணவனுடன் அயல்வீடுகளிலுள்ள இரு மாணவர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த மாணவன் தனது இரு நண்பர்களுடன் நீளம் பாயும் விளையாட்டினை விளையாடுவதற்கு விருப்புடன் முன்வந்தமை ஆய்வாளனின் ஆய்வு செயற்பாடுகளுக்கு இலகுவாக இருந்தது. இச்செயற்பாட்டினால் ஆய்வாளரால் குறித்த மாணவனை நீளம் அளத்தல் திறனை நிகழ்நிலையின் ஊடாக மேம்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது. முதற் செயற்பாடாக எதேச்சையான அலகு ஒன்றின் மூலம் பொருட்களை அளந்து கூறுவதற்கான செயற்பாடுகளில் மாணவர் உட்படுத்தப்பட்டார்.
செயற்பாடு 01    எதேச்சையான அலகுகளைக் கொண்டு நீளம்
அளப்பதற்கு பயிற்சி அளித்தல்.
நோக்கம்        : எதேச்சையான அலகுகளைக் கொண்டு நீளம் அளத்தல் திறனை நிகழ்நிலை வகுப்பினூடாக மேம்படுத்தல்.
துணைச்செயற்பாடு 01: நீளம் அளத்தலை விளையாட்டு முறையுடன் அறிமுகப்படுத்தல்.
(குறித்த மாணவனின் இச்செயற்பாட்டிற்காக தனது வகுப்பு சகபாடிகள் இருவரை சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இம்மாணவர்கள் இருவரும் குறித்த மாணவனின் அயல் வீட்டில் வசிப்போராவர்.)
குறித்த மாணவனை அவனது அயல்வீட்டு சகபாடிகள் இருவருடன் நீளம் பாய்தல் விளையாட்டில் ஈடுபடச் செய்தல். விளையாட்டில் ஈடுபடும் போது குழுவின் தலைவராக குறித்த மாணவன் நியமிக்கப்பட்டார். விளையாட்டில் ஈடுபடும்போது மூன்று மாணவர்களும் நீளம் பாய்வதை அளந்து குறிப்பதற்கு பின்வருமாறு ஓர் அட்டவணை தயாரித்து வழங்கப்பட்டது. மாணவர்கள் பாயும் தூரத்தை பானக்குழாய்களால் அளப்பதற்கு வலியுறுத்தப்பட்டது. 
அட்டவணை 01: பாயும் தூரத்தை எதேச்சை அலகால் அளத்தல்.
மேற்கூறப்பட்ட அட்டவணையை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட குறித்த மாணவனையே நிரப்புவதற்கு வழிப்படுத்தல். விளையாட்டுச் செயற்பாட்டில் குறித்த மாணவன் விருப்பத்துடன் செயற்பட்டாலும் அவர்கள் பாயும் நீளத்தைப் பிழையாகவே அளந்து குறித்தார். அதாவது பானக்குழாயை பிடித்து அளக்கும்போது இரு பானக்குழாய்களுக்கிடையே இடைவெளிகளை விட்டு அளந்து குறித்ததை அவதானிக்க முடிந்தது.
துணைச் செற்பாடு 01 : நீளம் அளத்தலை விளையாட்டு முறையுடன் அறிமுகப்படுத்தல்.

3.7 இரண்டாம் வட்டத்தில் திட்டத்தை செயற்படுத்திய விதமும் பிரதிபலிப்பும்

செயற்பாடு ஒன்றில் மாணவர்கள் மூவரும் பாய்ந்த நீளத்தைக் குறித்த மாணவன் சரியாக அளப்பதில் தவறியமையால் இரண்டாவது முறையாக அவ்விளையாட்டை விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. குறித்த மாணவன் நீளம் அளத்தலில் இட்ட பிழைகளை சுட்டிக்காட்டி அப்பிழைகளை நிவர்த்தி செய்து மீண்டும் பிழைகள் வராது கவனமாக மாணவர்கள் பாய்ந்த நீளத்தை அளந்து ஒப்படைக்குமாறு கூறப்பட்டது. அத்துடன் மாணவர்கள் விளையாடும் சந்தர்ப்பத்தை குறித்த மாணவனின் சகோதரியிடம் வீடியோ காட்சியினை பதிவு செய்து புலத்தினூடாக (Whatsapp) அனுப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டது. 
அட்டவணை 02: இரண்டாம் மீள் திட்டமிடலில் பாயும் தூரத்தை எதேச்சை அலகால் அளத்தல்.
குறித்த மாணவன் இரண்டாவது தலையீட்டில் சரியாக பானக்குழாய்களை பிடிப்பதும் மாணவர்கள் பாய்ந்த தூரத்தை சரியாக அளப்பதையும் வீடியோ காட்சிகளால் ஆய்வாளரால் உறுதி செய்துகொள்ள முடிந்தது. 
செயற்பாடு 01 :  எதேச்சையான அலகுகளைக் கொண்டு நீளம்
அளப்பதற்கு பயிற்சி அளித்தல்.
நோக்கம்   : நீளம் அளப்பதற்கான தசைநார்ப் பயிற்சிகளை விருத்தி செய்தல்.
துணைச்செயற்பாடு 02: பெற்றோரின் உதவியுடன் தசைநார் பயிற்சிகளை வழங்குதல்.
ஆய்வாளரால் குறித்த மாணவனுக்கு இச்செயற்பாட்டை வழங்குவதற்கு அவரின் சகோதரி முறையிலான நபரின் உதவிகளை பெறுவதற்காக அவருடன் தொலைபேசி வாயிலாக உரையாடப்பட்டது. அவருடன் உதவிகளை வழங்குவதற்கு சம்மதித்தார்.
இச்செயற்பாட்டினை செயற்படுத்துவதற்காக பின்வரும் பொருட்களை தயார் செய்து வைக்குமாறு குறித்த சகோதரியிடம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
1. தரம் 04 கணித செயல்நூல் 
2. தரம் 04 சமய புத்தகம்
3. பென்சில் 01
4. பானக்குழாய் 01
5. உணவுப்பெட்டி
6. தீக்குச்சி
மேற்கூறப்பட்ட பொருட்களை தீக்குச்சிகளை கொண்டு நீளங்களை அளந்து பின்வரும் அட்டவணையில் குறிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதனை கண்காணிப்பதற்கு குறித்த சகோதரியின் உதவியும் பெறப்பட்டது.
அட்டவணை 03    : எதேச்சை அலகால் பொருட்களின் நீளத்தை அளத்தல்.
மாணவருக்கு வழங்கப்பட்டட பொருட்களையும் அவ்வட்டவணையையும் ஆய்வாளருக்கு ஒன்றும் குறித்த மாணவருக்கு ஒன்றும் தயார் செய்யப்பட்டது. ஆய்வாளரால் செயற்பாட்டினை செய்து அட்டவணையை பூர்த்தி செய்தார். ஆய்வுக்கு உட்படுத்திய குறித்த மாணவனின் அட்டவணைக்கும் ஆய்வாளரின் அட்டவணைக்கும் இடையே கீழ்காணுமாறு வித்தியாசங்கள் காணப்பட்டன. 
ஆய்வுக்குட்படுத்திய மாணவனின் செயலட்டை :

ஆய்வாளரின் செயலட்டையில் குறிக்கப்பட்ட பொருட்களின் நீளங்களும் குறித்த மாணவனின் செயலட்டையில் குறிக்கப்பட்ட நீளங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டதிலிருந்து மாணவன் சரியாக தீக்குச்சிகளை பயன்படுத்தி அளக்கவில்லை என்பதை ஆய்வாளரால் அறிய முடிந்தது. எனவே இரண்டாம் தலையீட்டை செய்ய ஆய்வாளரால் முடிவு செய்யப்பட்டது.
செயற்பாடு 01 :

இரண்டாம் வட்டத்தில் திட்டத்தை செயற்படுத்திய விதமும் பிரதிபலிப்பும் :
இச்செயற்பாட்டில் பொருட்களை குறைத்து மூன்று பொருட்களாக்கப்பட்டன. அவை தரம் 04 கணித செயலநூல், தரம் 04 தமிழ் வாசிப்பு நூல், பானக்குழாய் என்பவையாகும். மேற்கூறப்பட்ட பொருட்களின் நீளங்களை தீக்குச்சியைக் கொண்டு அளக்கும் வீடியோ காட்சி ஒன்றை ஆய்வாளரால் செய்து மாணவனுக்கு புலனத்தினூடாக அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த மாணவன் வீடியோவினை அவதானித்ததன் பின் மீண்டும் வழங்கப்பட்ட அட்டவணையை பூர்த்தி செய்து அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது.
மீண்டும் வழங்கப்பட்ட அட்டவணை
இரண்டாம் மீள்திட்டத்தில் எதேச்சை அலகால் பொருட்களை அளத்தல்.
இவ்வட்டவணையிலுள்ள பொருட்களையும் ஆய்வாளரால் அதே தீக்குச்சியினை பயன்படுத்தி அளந்து குறித்து வைக்கப்பட்டது. மாணவன் இவ்வட்டவணையை பூர்த்தி செய்து புலனம் மூலம் அனுப்பி வைத்ததும் இரு அட்டவணைகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மாணவன் சரியாக தீக்குச்சிகளை பயன்படுத்தி நீளங்களை  அளந்தமை தெளிவாகியது. இச்செயற்பாட்டிலிருந்து குறித்த மாணவன் தசைநார் பயிற்சியையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செயற்பாடு 01    : எதேச்சையான அலகுகளைக் கொண்டு நீளம் அளப்பதற்கு பயிற்சி அளித்தல்.
துணைச்செயற்பாடு 03    : எதேச்சையான அலகுகளைக் கொண்டு நீளத்தை அளக்கச் செய்தல்.
நோக்கம்    : எதேச்சையான அலகுகளைக் கொண்டு நிளத்தை அளக்கச் செய்யும் திறனை விருத்தி செய்தல்.
மேற்கூறப்பட்ட செயற்பாட்டிலுள்ள துணைச்செயற்பாடு மூன்றினை அறிமுகப்படுத்துவதற்காக பின்வரும் தர உள்ளீடுகள் பயன்படுத்தப்பட்டன.
1) பானக்குழாய்
2) மாணவனின் கைசாண் அளவு
3) பயிற்சிக் கொப்பி
4) பென்சில்
அளப்பதற்குரிய பொருட்களாக வீட்டின் கதவு, மாணவனின் படிக்கும் மேசை, கரம் போர்ட் போன்ற பொருட்கள் மாணவனின் வீட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. பொருட்களை எதேச்சையான அளவுகளைக் கொண்டு அளப்பதற்கு முன் நிகழ்நிலையினூடாக எவ்வாறு அளப்பது என கற்பிக்கப்பட்டது. தொடர்ந்து செயலட்டைகளையும் அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த மாணவன் குறித்த பொருட்களை அளக்கும் போது அதனை வீடியோ செய்வதற்கான ஆயத்தங்களும் ஆய்வாளரால் செய்யப்பட்டிருந்தன. பொருட்களை அளந்து குறிப்பதற்கு பின்வருமாறு அட்டவணைகள் தயார் செய்யப்பட்டு புலனம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது. 
எதேச்சை அலகுகளால் நீளத்தை அளந்து பட்டியல்படுத்தல் :

மேற்குறித்த அட்டவணைகளின் அடிப்படையில் செயலட்டைகளை குறித்த மாணவனுக்கு வழங்கி செயற்பாடுகளில் ஈடுபட வழிப்படுத்தப்பட்டது. 
அவ்வாறு குறித்த மாணவன் செயற்பாடுகளில் ஈடுபடும் போது சாண் அளவுகளைக் கொண்டு அளப்பதில் இடர்பட்டமையை வீடியோ காட்சிகள் மூலம் ஆய்வாளரால் இனங்காண முடிந்துது. எனவே குறித்த மாணவனுக்கு மீண்டும் சாண் அளவுகளைக் கொண்டு அளப்பதற்குறிய பயிற்சிகள் அளிப்பதற்கு தீர்மானிக்;கப்பட்டது.
குறித்த மாணவன் மேற்கண்ட செயற்பாட்டை தனது ஒரு கையை பயன்படுத்தி சாண் அளவுகளில் அளக்கும் போது ஒவ்வொரு சாண் அளவுகளுக்கமிடையில் இடைவெளி வருவதை அவதானிக்க முடிந்தது. எனவே மாணவனின் இரு கைகளையும் பயன்படுத்தி சாண் அளவுகளை அளப்பதற்கான பயிற்சிகளை நிகழ்நிலையினூடாக வழங்கப்பட்டது. அவ்வாறான பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் அதே பயிற்சி செயலட்டைகளை மீள செய்வதற்கு வழங்கப்பட்டது. 
குறித்த மாணவன் குறித்த அட்டவணையை மிகச் சரியாக பூர்த்தி செய்தமையை அவதானிக்க முடிந்தது.
செயற்பாடு 02 :
நோக்கம்     : நியம அலகான cm ஐ பயன்படுத்தும் திறனை மேம்படுத்தல்.
துணைச்செயற்பாடு     01:  cm அளவு தொடர்பான விளக்கத்தைப் பெறச்செய்தல்.
ஒரு மீற்றரிலும் குறைவான நீளம் ஒன்றை அளப்பதற்கு cm ஐ பயனபடு;த்துவதற்காக வழிப்படுத்தல்.
நேர்விளிம்பின் விபரம்
குறித்த மாணவனுக்;கு நேர் விளிம்பு பற்றிய விளக்கத்தை நிகழ்நிலையினூடாக கற்பித்ததன் பின்னர் பின்வரும் வினாக்கள் வினவப்பட்டது.
1. நேர் விளிம்பின் தொடக்கக் குறி எவ்விலக்கத்தில் ஆரம்பிக்கப்படும்? 
2. cm கோலைப் பயன்படுத்தி அளக்கக் கூடிய பொருட்கள் எவை?
3. சென்றிமீற்றருக்கான நியமக் குறியீட்டு வடிவம் எது?
மேற்குறித்த வினாக்களுக்கு மாணவனால் சரியாக விடையளிக்கப்பட்டதை ஆய்வாளரால் அவதானிக்க முடிந்தது. பின்னர் பின்வரும் சில பொருட்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு குறித்த மாணவனின் தந்தையிடம் அறிவுறுத்தப்பட்டது.
அப்பொருட்களின் நீளத்தை குறித்த மாணவனைக் கொண்டு 30cm அளவைக் கொண்ட சிறு கோல் ஒன்றை பயன்படுத்தி நீளத்தை அளந்து கூறுமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பின்வரும் அட்டவணையை நிகழ்நிலையினூடாக மாணவனுக்கு வழங்கப்பட்டது. அவ்வட்டவணையை பூர்த்தி செய்வதற்குரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
மாணவன் அனுமானித்த நீளமும் நியம அலகின் உண்மையான நீளத்திற்குமிடையில் ஓரளவு கிட்டியதாக இருந்தமையால் அடுத்த பயிற்சிக்கு செல்லப்பட்டது.
பென்சிலின் நீளம் : ………………….               கடிதத்தின் நீளம் :………………
மேற்கூறப்பட்ட பயிற்சிகள் இரண்டையும் மாணவர் செய்தார். பென்சிலின் நீளத்தை குறிப்பிடும்போது உரு 01 7cm க்கு பதிலாக மாணவர் 8cm ஐ பிழையாக குறித்தார். உரு 02 க்கு B யின் நீளத்தை 4cm க்கு பதிலாக 3cm என பிழையாக குறித்தார். எனவே இச்செயற்பாடுகளுக்கு இரண்டாம் தலையீட்டுக்குச் செல்ல ஆய்வாளரால் முடிவு செயயப்பட்டது. 
செயற்பாடு 02

இரண்டாம் வட்டத்தில் திட்டத்தை செயற்படுத்திய விதமும் பிரதிபலிப்பும் :
மேற்கூறப்பட்ட இரு செயற்பாடுகளையும் நிகழ்நிலை வகுப்பினூடாக குறித்த மாணவருக்கு மீள வழியுறுத்தல் ஒன்றை மேற்கொண்ட பின்னர் மீண்டும் பின்வரும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேற்படி செயற்பாடுகளை குறித்த மாணவன் மிகச்சரியாக செய்து வினாக்களுக்கு விடை கூறினார். வினாக்களுக்கு சரியான விடைகளையும் எழுதினார்.
செயற்பாடு 03 : மீற்றரை பயன்படுத்தி (m) நீளம் அளப்பதற்கு பயிற்சி அளித்தல்.
நோக்கம் : மீற்றரை பயன்படுத்தி நீளம் அளக்கும் திறனை மேம்படுத்தல்.
துணைச்செயற்பாடு 01:  மீற்றர் அளவு தொடர்பான விளக்கத்தை பெறச் செய்தல்.
மேற்கண்ட விடயங்களை நிகழ்நிலை வகுப்பில் வீடியோக்கள் மூலம் கற்பிக்கப்பட்டது. பின் குறித்த மாணவனிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டு மீற்றர் தொடர்பான விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டது. தொடுக்கப்பட்ட வினாக்களுக்கான உதாரணங்கள், 
1. ஒரு மீற்றரில் எத்தனை cm கள் உள்ளன?
2. கடையில் துணி வாங்கும் போது என்ன அளவு கொண்டு கேட்பீர்கள்?
தொடர்ந்து பின்வருமான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சென்றிமீற்றரில் எழுதுவோம்.

1.   3m             =…………………………………………..                       

2.  5m             =…………………………………………..

3.  10m           =…………………………………………..                                   

4.  7m             =…………………………………………..

5.  15m           =…………………………………………..                       

           6.  17m          =……………………………………………………


மீற்றரில் எழுதுவோம்.

1.   300
cm      =…………………………………………..
                       

2.   600cm       =…………………………………………..

3.   1000cm     =…………………………………………..                       

4.   800cm       =…………………………………………..

5.   1200cm     =…………………………………………..                       

6.   1600cm     =…………………………………………..

3.10 இறுதி பிரதிபலிப்பின் மூலம் கண்டறிந்தவைகள்

ஆய்வாளர் என்ற வகையில் என்னில் ஏற்பட்ட மாற்றம்

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ம.மா/வ/பிளேலோமவுண்ட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் ஓர் மாணவரை மையப்படுத்தியே இந்நிகழ்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி இருந்தாலும் கூட பிரதிபலிப்பு குறிப்பு மூலம் நீளம் அளத்தல் தொடர்பான இடர்பாடுகளை எதிர்நோக்கியமை பிரதானமான பிரச்சினையாக தென்பட்டது. எனவேதான் இதனை ஆய்வுக்குரிய ஓர் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு ஆய்வினை மேற்கொண்டேன்.
இவ்வாய்வின் மூலம் ஓர் ஆய்வினை எவ்வாறு செயற்படுத்துவது அதன் படிமுறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற அனுபவம் கிடைத்தது. மேலும் மாணவரிடத்தே காணப்படும் சிறப்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டறிந்து, கல்வி நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்குரிய வழிகாட்டல் கிடைத்தது. குறைந்த அடைவு மட்டத்தைக் காட்டுகின்ற மற்றும் வேறு நடத்தை பிரச்சினைக் கொண்ட பிள்ளைகளைக் கைவிடாது முன்கொண்டு செல்லக்கூடிய திறன் கிடைத்தது. சிறு சிறு பிரச்சினைகளைக் கூட விஞ்ஞான பூர்வமாக ஆழ்ந்து நோக்குவதற்குத் தேவையான திறன் கிடைத்தது.
மேலும் இதுவரையில் கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகள் தொடர்பாகக் கவனம் செலுத்த முடிந்த யாதேனும் பிரச்சினை தொடர்பாக ஆழ்ந்த தேடல் நடத்துவதற்கும் நுணுக்கமாண விடயங்களை அவதானித்து கற்றல் கற்பித்தல் செயன்முறையின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் ஆர்வம் ஏற்பட்டது. அத்துடன் எனது தொழில்சார் வாழ்க்கையை வெற்றிகரமானதாக்கி கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. பெற்றோர் மாணவர் இடைத்தொடர்பு, தொழில்நுட்ப அறிவு என்பவற்றில் அபிவிருத்தி நிலை எய்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. 
இலக்குக் குழுவில் ஏற்பட்ட மாற்றம் 
ஆய்வுக்கு உட்படுத்திய மாணவன் ஆரம்பத்தில் நீளம் அளத்தல் தொடர்பில் விளங்கிக்கொண்டு விடையளிப்பதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கியிருந்தார். படிமுறை அடிப்படையில் செயற்பாடுகளைத் திட்டமிட்டு வழங்கியபோது படிப்படியான மாற்றம் தென்பட்டது. அத்துடன் குறித்த மாணவன் ஆர்வத்துடன் செயற்பட்டதை நிகழ்நிலையினூடாக நேரடியாக கண்காணிக்க முடிந்தது. அத்துடன் நிகழ்நிலையினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின்போது குறித்த மாணவன் சிறப்பான துலங்களை வெளிக்காட்டியதை அவதானிக்க முடிந்தது.
இறுதியாக மாணவனுக்கு வழங்கப்பட்ட கணிப்பீட்டு பத்திரங்கள் மூலமாக நீளம் அளத்தல் தொடர்பான திறன் விருத்தியடைந்துள்ளதை கீழ்வரும் நிரல் வரைபின் மூலம் கண்டறியலாம்.
அட்டவணை 3.10 : பிற்சோதனைக்காக வழங்கப்பட்ட பயிற்சிகள்
பெற்றுக்கொண்ட புதிய அறிவும் அனுபவமும்

தற்கால ஆசிரியரது வகிபாகம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. பல்வேறு விடயங்களில் கவனஞ் செலுத்தும் ஆசிரியர் தனது தொழில்சார் வகிபாகத்தை வெற்றிகரமாகத் தீர்த்துக் கொள்வதற்கும், காணப்படும் நிலையை மேம்படுத்தவதற்குமாக ஆசிரியர் ஓர் ஆராய்ச்சியாளராகச் செயற்படுவது இன்றியமையாததாகின்றது. 
சுயமான ஆசிரியர் விருத்திகளை காத்திரமான வகையில் பிரயோகிக்கத்தக்க ஆராய்ச்சி அணுகுமுறையாக செயல்நிலை ஆய்வினை கருதமுடியும். தனது கற்பித்தல் பணிகள் தொடர்பாகப் பிரதிபலிப்பு செய்து தாம் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகளில் மாற்றங்களைச் செய்யும் ஆசிரியர்களுக்கு செயல்நிலை ஆய்வு முறையியல் மிக முக்கியமானதாகும்.
ஆரம்ப மற்றும் இடைநிலைத் தரங்களில் கற்றல் கற்பித்தலை நெறிப்படுத்தும்போது தோன்றும் பிரச்சினைகளுக்காக தமது சொந்த தீர்வுகளைத் தேடுவதற்கு செயல்நிலை ஆய்வு இன்றியமையாததாகும்.
தமது வகுப்பறை பிள்ளைகளில் பண்பு ரீதியான, தர ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தவதற்கும்,  எதிர்ப்பார்க்கும் மட்டத்தில் கற்றல் தேர்ச்சிகளை அடைவதற்கும் இடர்பாடுகளை எதிர்நோக்கியிருக்கும் மாணவரை அவ்விடர்பாடுகளில் இருந்து விடுவிப்பதற்கும் செயல்நிலை ஆய்வு முக்கியமாகின்றது. 
இன்று பாடசாலைகள் பல்வேறு பரிமாணங்களையும் உபதொகுதிகளையும் கொண்ட ஒரு பெரும் தொழிற்துறை போன்றே இயங்குகின்றன. எவ்வாறு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான (Research and
development)
 ஒரு பிரிவு இன்றியமையாததோ அதேபோல் பாடசாலைகளிலும் இவ்வகையான பிரிவு தேவை என்பதை உணர்ந்துகொண்டேன். 
ஒவ்வொரு ஆசிரியரும்,  அதிபரும்,  கல்வி பணிப்பாளர்களும் கல்வித் தொடர்பான ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒரு ஆய்வு கலாசாரத்தை கல்வித் துறையிலே ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை கல்வியியல் ஆய்வுகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிய முடிந்தது. 
ஆய்வுகள் வழியாக புதிய கண்டுபிடிப்புகள்,  பிரச்சினை தீர்வுகள்,  புத்தாக்கங்கள் என்பவற்றை முன்வைக்க முடியும். தொடர்ச்சியான தேடலின் வழியாக மெய்மையை கண்டறியும் புலப்பெயர்ச்சியாக ஆய்வுகள் உள்ளன. செயல்நிலை ஆய்வானது எப்போதும் செயல்சார்ந்தது. ஆய்வு செய்பவரே செயலில் பங்கேற்று பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் இ நிலைமைகளை முன்னேற்றுவதிலும் ஈடுபட வேண்டும் என்பதை என்னால் அறியக்கூடியதாக உள்ளது. ஒரு நிலைமை மாற்றத்திற்குரியது என இனங்காணப்படின்,  அந்நிலைமைக்கான காரணங்களைக் கண்டறிந்து சீராக்கம் செய்ய செயல்நிலை ஆய்வே உகந்தது.
அத்துடன் குறிக்கோள்களை வரையறுப்பதற்கும்,  செயற்பாடுகளை காலவரையறைக்குள் ஒழுங்கமைப்பதற்கும்,  வளங்களைப் பிரயோகிப்பதற்கும் அடையப்பட்ட இலக்குகளைத் திட்டமிடுவதற்குமான அறிவினைப் பெற்றுக்கொண்டேன். திட்டமிடலில் ஆய்வு எவ் உள்ளடக்கத்தை பற்றி நிற்கின்றது? யார்,  எப்படி செயற்பட வேண்டும்? யாரிடம் உதவிகள் பெறலாம்? எதிர்ப்பார்க்கும் பெறுபேறுகள் எவை? நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றத்தை எவ்வாறு மதிப்பிடலாம்? இறுதி முடிவினை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? போன்ற விடயங்களை இச்செயல் ஆய்வின் மூலம் அனுபவமாக பெற்றுக்கொண்டேன். 
அத்துடன்,
1. திட்டமிட்ட விடயங்களை உரிய காலத்தில் செயற்படுத்தவதன் மூலம் மாணவரிடத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்ற விடயத்தை அறிந்து கொண்டேன்.
2. நேரமுகாமைத்தவம் எந்தளவிற்கு இச்செயல்நிலை ஆய்வில் முக்கியத்தவம் வகிக்கின்றது என்பதை புரிந்து கொண்டேன்.
3. மாணவனின் இடர்பாடுகளை திட்டமிட்ட பயிற்சிகள் ஊடாக இழிவுபடுத்த முடியும் அல்லது அவ் இடர்பாடுகளை முற்றாக நீக்க முடியும் என்ற அனுபவமும் இச்செயல்நிலை ஆய்வின் மூலம் கிடைத்தது.
4. குறித்த மாணவனின் அறிவு, திறன்,  மனப்பாங்கு மற்றும் தனியாள் விருத்தி,  சமூக விருத்தி போன்ற விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டமையை ஓர் அனுபவமாக கொள்ள முடியும்.
5. வகுப்பறைச் சூழலில் தனியாள் வேறுபாட்டிற்கமைய கற்றல் கற்பித்தல் முறைகளையும் கற்றல் கற்பித்தல் சாதனங்களையும் பயன்படுத்தும் போது கற்றலின்பால் இடர்பாடுகளைத் தவிர்த்துக் கொண்டு வகுப்பறைச் சூழலை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்து கொண்டேன். 

4.0 உசாத்துணை நூல்கள்

புவனேஸ்வரன், சி. (2003). கூர்மதி, கிரீப்ஸ் பிரிண்டர்ஸ், 162, டாம் வீதி.
கொழும்பு 12.
லோகேஸ்வரன், ஆர். (2007). கற்றல் கற்பித்தலின் செல்நெறி, விழி 39,  அகவிழி.
ஒஸ்வெல்ட்,  ஏ. (2007),  வினைத்திறன் மிக்க கற்றல், விழி 34, அகவிழி. தணிகாசலம்பிள்ளை, ச.நா (2008). ஆரம்பக்கல்வி,  கே.வி.எல். பிரிண்டஸ், 146-2/1,  காலி வீதி, கொழும்பு 06.
பக்கீர் ஜஃபார், ப.கா. (2009). மாணவரின் வகுப்பறை நடத்தை, குமரன் அச்சகம், 361, 1/2 டாம் வீதி கொழும்பு 12.
சுபாகரன், எஸ்.பி.இஸ்ரா டி.என். (2009). வெற்றிகரமான கற்றல் நுட்பங்கள்இ எம்.ஜே.எம். அச்சகம், பேராதனை பல்கலைக்கழக மெய்யியற் சங்க வெளியீடு.
நிர்மலாதேவி ந. (2010). ஆரம்பக்கல்வியில் செயற்திறன்குமரன் புத்தக இல்லம் கொழும்பு 06.

சந்திரசேகரன் சோ.(2017). சமகால கல்வி முறைகளின் சில பரிமாணங்கள் சேமமடு பதிப்பகம்இ கொழும்பு-11.

கணிதம் ஆசிரியர் வழிகாட்டி, (2018). தரம் 04 கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.

5.0 இணைப்புகள்

இணைப்பு – I

கணிப்பீட்டுக்காக வழங்கப்பட்ட வினாப்பத்திர செயற்பாடுகள்.
பயிற்சி 01

1. சென்றிமீற்றருக்கான நியம அலகு யாது?
2. மீற்றருக்கான நியம அலகு யாது?
3. ஒரு மீற்றரில் எத்தனை சென்றிமீற்றர்கள் உள்ளன?
4. சிறிய அலகை அளக்க பயன்படும் அளவுகோல் எது?
5. பெரிய அலகை அளக்கப் பயன்படும் அளவுகோல் எது?
பயிற்சி 02

சென்றிமீற்றரில் எழுதுவோம்.

1.   1m  60cm  =………………….

2.  4m  75cm  =………………….

3.  5m  50cm  =………………….
           

4.  8m  07cm  =………………….

           5.  9m  50cm  =…………………


பயிற்சி 03

மீற்றர் சென்றிமீற்றரில் எழுதுவோம்.

1.   450cm       =…………….

2.   308cm       =…………… 

3.   270cm       =…………… 

4.   625cm       =……………

5.   775cm       =……………


இணைப்பு – II
மாணவரது செயற்பாடுகள் தொடர்பான நிழற்படங்கள்,

—————————————————————————————————————



இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
Whatsapp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  

ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
Telegram குழுமத்தில் எம்மோடு இணைவதாயின்,

எம்முடைய பிற  பதிவுகள்

இப்பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..! 

Leave a Comment